பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகை அச்சுறுத்தும் சவால்கள்... டேவோஸ் மாநாட்டில் பிரதமர் உரை!
சுவிட்சர்லாந்தின் டேவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
Recommended Video
டேவோஸ் : பிரதமர் நரேந்திர மோடி சுவிட்சர்லாந்தின் டேவோஸில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றினார். நமஸ்தே என்று கூறி தன்னுடைய உரையை மோடி தொடங்கினார்.
மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது : உலகத்துக்கும் இந்தியாவிற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது தீவிரவாதம். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் தீவிரவாதத்தை விட மோசமானது. உலகில் நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என்பதெல்லாம் கிடையாது.
உலகம் இன்று 3 முக்கிய சவால்களை சந்திக்கிறது. பருவநிலை மாற்றம் என்பது அதில் முக்கியமான ஒன்று. பருவநிலை மாற்றம் என்பது உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருகி பல தீவுகள் மூழ்கிக் கொண்டும், மூழ்கும் நிலையிலும் உள்ளன.
இந்தியா எப்போதுமே ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பில் நம்பிக்கை பெற்றது. சுருக்கமாக சொல்லப்போனால் இந்த உலகம் முழுவதுமே ஒரே குடும்பம். வேகமாக மாறி வரும் பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இந்த உலகம் வித்திட்டுள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மை என்பது உலகம் சந்திக்கும் முக்கிய சவால்களாக உள்ளன.
உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ஏற்ப சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது என்று இந்த ஆண்டின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. புதிய ஆளுமைகள் பொருளாதார மற்றும் அரசியல் பலத்தை மாற்றும் சக்திகளை சமன்படுத்துபவையாக இருக்கின்றன. இது எதிர்கால உலகிற்கு மாற்றத்தைத் தரும்.
நமது பொருளாதார சமூக கொள்கைகளில் புரட்சியை உருவாக்கியுள்ளோம். இதற்கு நாம் தேர்வு செய்திருக்கும் பாதை சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம். ஜனநாயம் மற்றும் பன்முகத்தன்மை குறித்து இந்தியா பெருமையடைகிறது. பல்வேறு மத, மொழி, கலாச்சாரம், பண்பாடு எங்கள் சமுதாயத்தில் உள்ளது. ஜனநாயகம் என்பது அரசியல் அமைப்பு அல்ல, எங்களின் வாழ்க்கை நிலை.
இந்தியாவின் தரவரிசையில் மாற்றம் வந்திருப்பது என்பது இந்திய மக்கள் கொள்கைகளில் செய்யப்படும் மாற்றங்களை மனமுவந்து ஏற்கிறார்கள் என்பதற்கான குறியீடு. இது தான் சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை வகுக்கும். இந்தியா ஐநாவின் அமைதிப் பேச்சுக்கான பல்வேறு அழுத்தங்களை தந்துள்ளது. ஏனெனில் இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுக்கு உதவ விரும்புகிறது என்றும் நரேந்திர மோடி பேசினார்.