மோடி அளித்த 'கேரள பரிசு'.. மனம் நெகிழ்ந்து போன இஸ்ரேல் பிரதமர்! #Israel
கேரளாவில் கண்டெடுக்கப்பட்ட யூத மொழி செப்புத் தகடுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ-வுக்கு வழங்கி மகிழ்ச்சியடைந்தார் பிரதமர் மோடி.
ஜெருசலேம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட யூத மொழி செப்புத் தகடுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ-வுக்கு பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்தார் இந்திய பிரதமர் மோடி.
3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு வந்து நேரில், மோடியை வரவேற்றார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ.
இதனைத் தொடர்ந்து, மோடி இஸ்ரேலின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு முதலில் சென்ற இந்திய பிரதமர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார்.
பின்னர், இரவில் அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமருக்கு யூத மொழியில் எழுதப்பட்ட செப்புத் தகடுகளை பரிசாக வழங்கி மகிழ்ச்சியூட்டினார். இது இஸ்ரேல் பிரதமருக்கும் அந்நாட்டு அதிகாரிகளுக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிபி 9ம் நூற்றாண்டு முதல் தொடர்பு
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திப் பதிவுகளில், " கி.பி. 9 அல்லது 10ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த யூத மொழி செப்புத் தகடுகள் இரண்டை இஸ்ரேல் பிரதமருக்கு பரிசாக வழங்கினார் இந்திய பிரதமர்.
கேரளாவில் யூதர்கள் வாழ்ந்த சுவடுகள்
அதில் முதல் தகடு கேரளாவில் யூதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ளன என்பதற்கு சான்றாக உள்ளது. கேரள மன்னன் சேரமான் பெருமாள் காலத்தில், யூத தலைவர் ஜோசப் ரப்பான் வாழ்ந்துள்ளார். அவர், ஷிங்க்லி என்ற பகுதியின் இளவரசனாகவும் இருந்துள்ளார்.
|
கேரளாவின் பிற பகுதிகளுக்கு இடப்பெயர்வு
பின்னர், காலப்போக்கில் அங்கிருந்த யூத மக்கள் கொச்சினுக்கும் மலபார் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பிறபகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். வழிவழியாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது.
இரண்டாவது ஜெருசலேம் கேரளா
ஷிங்க்லி பகுதியும், கிராங்கனூர் பகுதியும் யூதர்களின் இரண்டாவது ஜெருசலேம் என்று இப்போதும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இந்தப் பகுதி இப்போதுள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக உறவுகள்
இரண்டாவது செப்புத் தகடு, கேரள மன்னர்களுக்கும் யூத நாட்டவருக்கும் இருந்த வர்த்தக உறவுகளுக்குச் சான்றாகவுள்ளது. மேலும் மேற்கு ஆசிய நாடுகளின் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளிட்ட பெரிய வணிகர்களோடு செய்யப்பட்ட வணிக ஒப்பந்தங்களையும் இந்த செப்புத்தகடு காட்டுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவல்லா தேவாலயம்
மோடி, இஸ்ரேல் பிரதமருக்கு பரிசாக அளித்த செப்புத் தகடுகள், கேரளாவின் திருவல்லா பகுதியில் உள்ள மல்லங்கரா மார் தோமா சிரியன் தேவாலய நிர்வாகம் மூலம் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.