அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தப் போகிறார் மோடி…!
வாஷிங்டன்: எந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் நரேந்திர மோடிக்கு விசா கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டார்களோ அவர்களுக்கு முன்பாக உரை நிகழ்த்தப் போகிறார் மோடி - இந்தியாவின் பிரதமர் என்ற அந்தஸ்தில்.
மோடிக்கு விசா தர மறுத்தவர்கள் எல்லாம் இப்போது மோடியின் உரையை அமைதியாக உட்கார்ந்து கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் உரை நிகழ்த்தவுள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற காங்கிரஸ் மற்றும் செனட் சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் மோடியை உரை நிகழ்த்த அழைப்பு விடுக்குமாறு கலிபோர்னியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி எம்.பி எட் ராய்ஸ் மற்றும் காங்கிரஸ் வெளியுறவு விவகாரக் கமிட்டியின் தலைவரும், சபாநாயகர் ஜான் போஹ்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவை விட
அக்கடிதத்தில், அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் என அனைத்து வகையிலும் இந்தியாவை விட சிறந்த பங்காளர் தெற்கு ஆசியாவில் இப்போதைக்கு இல்லை.
மிக்ச சிறந்த பங்காளர்
21வது நூற்றாண்டில் இந்தியா, அமெரிக்கா உறவுகள் மிகச் சிறந்ததாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. எனவே பிரதமர் மோடி கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு விடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதரவு அதிகரிப்பு
இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது. இதுவரை சபாநாயகர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடவில்லை என்ற போதிலும், குடியரசுக் கட்சியினர் மத்தியில் இந்த கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனவே விரைவில் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆரம்பித்து வைத்த புஷ்
கடந்த 2005ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா வருவதற்கான விசா வழங்குவதை அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதால் சர்ச்சை வெடித்தது.
98 சட்டத்தைக் காரணம் காட்டி
1998ம் ஆண்டு சட்டத்தைக் காரணம் காட்டி இந்த முடிவை புஷ் எடுத்தார்.
2002 குஜராத் கலவரம் காரணமாக
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா தரக் கூடாது என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மூலம் நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு புஷ் வந்தார்.
பிரதமரானதால் நிலையில் மாற்றம்
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் மிகப் பெரிய வெற்றியை மோடி தலைமையிலான பாஜக லோக்சபா தேர்தலில் பெற்று மோடியும் பிரதமராகி விட்டதால் அமெரிக்கா அப்படியே பல்டி அடிக்க வேண்டியதாகி விட்டது.
விழுந்து விழுந்து வாழ்த்து
மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியும் விழுந்து விழுந்து வாழ்த்து தெரிவித்து அமெரிக்காவுக்கும் வருகை தருமாறு அழைத்தனர். அதை ஏற்று தற்போது அமெரிக்கா போகிறார் மோடி.
ரஷ்யாதான் பர்ஸ்ட்
அதேசமயம், ரஷ்யாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்தும் ஆர்வத்தில்தான் மோடி இருக்கிறார். அமெரிக்காவை அவர் இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.