சியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்
சியோல்: தென்கொரியாவில் இன்று நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் 14-வது நபராக மோடி திகழ்கிறார்.
கடந்தாண்டு அக்டோபரில் பிரதமர் மோடிக்கு 'சியோல் அமைதிப் பரிசு' அறிவிக்கப்பட்டது. ஏழை- பணக்காரர் இடையிலான சமூக மற்றும் பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்ததற்காகவும் உலக அமைதிக்காகப் பங்காற்றியதற்காகவும் சியோல் அமைதி விருது வழங்கப்படுவதாக தென்கொரியா அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, இரண்டு நாள் பயணமாக நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி சியோல் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், யோன்சி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விழாவில், மோடிக்கு ' சியோல் அமைதிப் பரிசு' வழங்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி பேசினார். அப்போது, 1988 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தீம் பாடலின் பகுதியை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, கையோடு கை சேர்ந்து, நல்ல நாள் நாளை பிறக்கும் என்று நம்புவோம் என்றும், சிறந்த வாழ்வு இடமாக நாம் இந்த உலகத்தை உருவாக்வோம் என்றும் கூறினார்.
மேலும், தீவிரவாத நெட்வொர்க்கை முற்றிலுமாக ஒழிக்க நேரம் வந்துவிட்டது என்றும் அவ்வாறு செய்வதன் மூலம் நாம் வெறுப்பை வேரோடு அழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என்றார்.
சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நினைவாக சியோல் அமைதிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது . 1990- ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, முந்தைய ஆண்டுகளில் ஐ.நா. முன்னாள் செயலர் கோபி அன்னன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.