வியட்நாம் பிரபல புத்த கோயிலில் வழிபட்டார் மோடி
ஹனாய்: அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள மோடி, தலைநகர் ஹனாயில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க குவான் சு பகோடா புத்த கோயிலுக்கு சென்று வழிபட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4 நாள் சுற்றுப்பயணமாக வியட்நாம் மற்றும் சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி முதல் நாளான இன்று வியட்நாமில் இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, ஐடி, பாதுகாப்பு உள்ளிட்ட 12 ஒப்பந்தங்களில் கையெழுத்தானது.
இதனையடுத்து, குவான் சு பகோடா புத்த கோயிலுக்கு சென்றார் மோடி. அங்கு அவருக்கு புத்த துறவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், மோடி, அகர்பத்தி ஏற்றி புத்த முறைப்படி வழிபாடு நடத்தினார்.
பின்னர், அங்கு குழுமியிருந்த புத்த துறவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவிற்கும் வியட்நாமுக்கும் உள்ள உறவு 2000 ஆண்டுகள் பழமையானது என்றும் சிலர் இங்கு போர் புரிய வந்துள்ளார்கள், நாம் அமைதியை பேணவே வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் புத்த துறவிகளை இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் மோடி.
முன்னதாக, 1959ம் ஆண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், குவான் சு பகோடா புத்த கோயிலுக்கு சென்றதற்கு பிறகு, மோடிதான் அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.