மங்கள்யான் திட்டத்தில் துணை நின்ற பிஜி தீவுகளுக்கு மோடி நன்றி
சுவா, பிஜி: பிஜி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இ்ந்தியாவின் மங்கள்யான் திட்டத்தின் போது இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்த பிஜி தீவுகளுக்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும் பிஜி தீவுகளை, விண்வெளி ஆய்வில் பிராந்திய கூட்டுறவு மையமாக மாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் அப்போது வெளியிட்டார்.
பிஜி சென்றுள்ள மோடி, அங்குள்ள பிஜி நாடாளுமன்றம் மற்றும் பிஜி தேசிய பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். இரு இடங்களிலும் அவர் இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தில் பிஜி ஆற்றிய பங்கைப் பாராட்டத் தவறவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் மோடி பேசுகையில், இந்தியாவின் மங்கள்யான் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, இந்திய விஞ்ஞானிகள் பிஜி தீவிலிருந்தபடி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படுவதை கண்காணித்தனர். இதற்கு அனுமதி அளித்த, ஒத்துழைப்பு கொடுத்த பிஜி தீவு அரசுக்கும், பிஜி மக்களுக்கும் எனது நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன் என்றார்.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் நிகழ்வை கண்காணிக்க இஸ்ரோவைச் சேர்ந்த 18 விஞ்ஞானிகள் பிஜி தீவில் முகாமிட்டு செயலாற்றினர் என்பது நினைவிருக்கலாம்.
செப்டம்பர் 22ம் தேதி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பிஜியிலிருந்தும், தென் பசிபிக் கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேற நாடுகளிலிருந்தும் இந்த நிகழ்வை இந்திய விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.