பெரியாரும் அம்பேத்கரும், நம் உடனடித்தேவை- சிகாகோ உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் கவிஞர் சல்மா
சிகாகோ: பெரியாரும் அம்பேத்கரும் நம் உடனடித்தேவை என சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கவிஞர் சல்மா வலியுறுத்தினார்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அமெரிக்கத் தமிழ்விழா, உலகத்தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவானது, ஜூலை நான்காம் நாள் காலை ஒன்பது மணியளவில் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநாகரில் துவக்கி வைக்கப்பட்டு, ஜூலை ஏழாம் நாள் வரையிலும் நடைபெற உள்ளது.
முப்பெரும் விழாவின் ஓர் இணையமர்வாக, 'பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்(அமெரிக்கா)' அமைப்பின் நிகழ்வு அரங்கு நிறைந்த கூட்டமாக இடம் பெற்றது.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கனிமொழி வந்திருந்தோரை வரவேற்றும், படிப்பு வட்டத்தின் தோற்றமும் அதன் பணிகள் குறித்தும் பேசினார். அதனை அடுத்து, பெரியார் அம்பேத்கார் ஒன்றாகத் தோற்றமளிக்கும் திருவுருவச் சிலையினை கவிஞர் சல்மா வெளியிட தமிழ்க்கல்விச் செயற்பாட்டாளருமான தோழர் ம.சிவானந்தம் பெற்றுக் கொண்டார்.
சிறப்புரையாற்றிய கவிஞர் சல்மா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் சமூகநீதிக்கான பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்தும், திராவிடச் சித்தாந்தத்தின் இன்றியயாமையை வலியுறுத்தியும் பேசினார். சாதிய பிற்போக்குத்தனமும், ஆணவப்படுகொலைகளும் மேலோங்கி வருகின்ற சூழலில், பெரியாரின் கொள்கைகளையும் அம்பேத்கர், கருணாநிதி ஆகியோரின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் தமிழ் மக்களிடையேயும், இந்திய மக்களிடையேயும் பரப்ப வேண்டியது படிப்புவட்ட உறுப்பினர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
சிக்காகோ நகரில் தமிழ்க்கல்வி, திராவிடச் சிந்தனைக் கருத்தரங்கம் முதலானவற்றைத் தொடர்ந்து செயன்முறைப்படுத்தி வரும் அருள்செல்வி பேசும்போது, அமெரிக்காவில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் வெகுவாக முன்வந்து பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புவதில் பங்கேற்க வேண்டுமென வேண்டுதல் விடுத்தார். அடுத்துப் பேசிய படிப்பு வட்டத்தைச் சார்ந்த கார்த்திகேயன் தெய்வீகராசன், முத்தமிழறிஞர் கலைஞர் எனும் தலைப்பில் பேசி, தமிழுக்கும் சமூகநீதிக்கும் கலைஞர் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு அரங்கத்தில் இருந்தவர்களோடு கூட்டாகப் புகழ்வணக்கம் செலுத்தினார்.
நிறைவாகப் பேசிய பெரியார் பன்னாட்டு மையத்தைச் சார்ந்த மருத்துவர் இளங்கோ, பெருந்திரளாக வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தும், படிப்புவட்டத் தோழர்களை அறிமுகப்படுத்தியும் பேசினார். பெரியார் அம்பேத்கர் இருவரும் அருகருகே நின்று கொண்டிருக்கும்படியான தோற்றச்சிலையும் மாநாட்டு வளாகத்தில் நிறுவப்பட்டிருந்தது, வந்திருந்தோரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்து வருகின்றது.
வளாகத்தில் அமைந்திருக்கும், பெரியார் அம்பேத்கர் வட்டத்தின் புத்தகக்காட்சி அங்காடியில் வைக்கப்பட்டிருக்கும் முற்போக்கு நூல்களை ஏராளமான அமெரிக்கத் தமிழர்கள் நூல்களை வாங்கிச் சென்றார்