லஞ்ச புகாரில் நெதன்யாகுவின் பெயரை சேர்க்க போலீஸ் பரிந்துரை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை லஞ்ச புகாரில் சேர்க்க கோரி போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.
ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விலை உயர்ந்த பரிசுகளை பெற்று லஞ்ச புகாரில் சிக்கியுள்ளதால் அவர் பெயரை சேர்க்க கோரி அட்டார்னி ஜெனரலுக்கு போலீஸ் பரிந்துரை செய்தது.
இஸ்ரேல் பிரதமராக உள்ளவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவர் சுமார் 12 ஆண்டுகளாக பிரதமராக உள்ளார். இவர் 2.8 லட்சம் டாலர் மதிப்பிலான விலை உயர்ந்த அன்பளிப்புகளை பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
அவரை லஞ்ச புகாரில் சேர்க்கக் கோரி அட்டார்னி ஜெனரலுக்கு போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. இஸ்ரேல் நாட்டை பொருத்தமட்டில் போலீஸாரின் இதுபோன்ற பரிந்துரை அல்லது முறையாக தண்டிக்கப்பட்டாலோ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை.
நெதன்யாகு மீது இரு வழக்குகளை போலீஸார் முன்வைக்கின்றனர். இதை முடிவு எடுக்க வேண்டியது அட்டானி ஜெனரல் ஆவார். போலீஸார் பரிந்துரையை ஏற்று நெதன்யாகு பெயரை சேர்ப்பதா வேண்டாமா என முடிவு செய்ய இன்னும் சில மாதங்கள் பிடிக்கும்.
ஆனால் நெதன்யாகு கூறுகையில் தான் எந்த தவறும் செய்யவில்லை. நான் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் மீண்டும் என்னையே பிரதமராக தேர்ந்தெடுப்பர் என்று அவர் கூறியுள்ளார். ஹாலிவுட் படத்தயாரிப்பாளர் அர்னான் மில்சான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பில்லியனர் ஜேம்ஸ் பாக்கர் ஆகியோரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.