பாரீஸில் போலீசார் மீது தீவிரவாதி தாக்குதல்.. தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொலை!
பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நோட்ரே டேமில் போலீசார் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை நடத்திய தீவீரவாதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நோட்ரே டேமில் போலீசார் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சுத்தியலால் போலீசாரை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி கொல்லப்பட்டார்.
இதனால் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் 2000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இதையடுத்து பாரீஸ் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.