”போலியோ பாதிப்பு இனி எங்கும் இருக்காது” மத்திய கிழக்கு நாடுகளிலும் இனி சொட்டு மருந்து…
அம்மான்: மத்திய கிழக்கு நாடுகளிலும் இனி தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
போரினால் சிதைந்து கிடக்கும் மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் போலியோ நோய் 15 ஆண்டுகள் கழித்து பரவத் தொடங்கியுள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த மாதம் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று ஐ.நா அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எகிப்து, ஈராக், ஜோர்டான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் துவங்கிவிட்டன.லெபனானில் வரும் 9ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று ஐ.நா குழந்தைகள் நிதியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது ஒரு மிகப் பெரிய திட்டமாகும் என்று யுனிசெப்பின் பிராந்திய இயக்குனரான "மரியா கலிவிஸ்" குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிரியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் அங்கு போலியோ பரவ ஆரம்பித்துள்ளதை உறுதி செய்தது. அதுமட்டுமின்றி எகிப்து, இஸ்ரேல், வெஸ்ட் பாங்க் மற்றும் காசா பகுதிகளின் கழிவுநீரில் போலியோ நோயின் மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை போலியோ தொடர்ந்து காணப்படும் பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து பரவியிருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவித்தன.
போலியோ பரவுவதற்கு எல்லைகள் கிடையாது என்று கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிக்கான உலக சுகாதாரக் கழகத்தின் பிராந்திய இயக்குனரான ஆலா அல்வான் குறிப்பிட்டார். சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பிரச்சினை அந்த நாட்டை மட்டும் பாதிப்பது அல்ல. இந்தப் பகுதியில் போலியோ நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால்தான் மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்படமுடியும் என்றும் அவர் கூறினார்.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் முந்தைய மருத்துவ வரலாறு பற்றி அறியத் தேவையின்றி சுகாதார முகாம் நடைபெறும் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு இரண்டு சொட்டு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டியது அவசியம் என்று டமாஸ்கசின் புறநகர்ப் பகுதியில் பணிபுரியும் "கொவ்சாமா அல்-ரஷீத்" என்ற மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் மட்டும் 1.6 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ, அம்மை, பொன்னுக்குவீங்கி மற்றும் ருபெல்லா போன்ற நோய்களுக்கு எதிரான மருந்துகளை அளிக்க இலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஏழு நாடுகளில் 22 மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பலமுறை போலியோ மருந்தினை அளிக்கவிருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.