பாகிஸ்தானில் இருந்து பிற நாடுகளுக்கு பரவும் போலியோ: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஜெனிவா: பெரும்பாலான நாடுகளில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டதாக கருதப்பட்ட போலியோ என்று அழைக்கப்படும் இளம்பிள்ளைவாத நோய் மீண்டும் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசமான நோய்
போலியோ கிருமி உடலுக்குள் சென்று உடல் ஊனத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே இது தாக்குகிறது. சொட்டு மருந்து ஊற்றுவதன் மூலம் போலியோ நோய் கிருமியை அழிக்க முடியும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்ததன் விளைவாக போலியோ முற்றிலுமாக வேரறுக்கப்பட்டது.
பரவுவது இப்படித்தான்
கிருமி தொற்றிய உணவு மற்றும் குடிநீர் ம்ூலமாக பரவும் இந்த வைரஸ், மனிதர்களின் குடலில் பல்கிப் பெருகி, நரம்பு மண்டலத்தை காக்துகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களில் 200-ல் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுவிடும். சில நேரங்களில் நோய் தாக்கிய ஒரு சில மணி நேரத்திலேயே மரணமும் ஏற்படலாம்.
ஏற்றுமதி நாடுகள்
பாகிஸ்தான், சிரியா, கேமரூன் ஆகிய நாடுகளை தவிர உலகின்
பிற நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. சமீபத்தில்தான் இந்தியா இந்த சாதனை பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட போலியோ வைரஸ் நடமாட்டம் உள்ள நாடுகள் மூலம் பிற நாடுகளுக்கும் அது பரவ வாய்ப்புள்ளது. இந்த நாடுகளில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்வோர் மூலமாக போலியோ பரவும்.
சான்றிதழ் தேவை
இதை கருத்தில் கொண்ட உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தான் உள்ளிட்ட மூன்று நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லுவோர், போலியோ தடுப்பு மருந்தை உட்கொண்டிருக்கிறார்கள் என்ற சான்றிதழுடன் பயணம் செய்ய வேண்டும். அதுபோல சான்றிதழ் அளிப்போருக்குதான் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதான் இரண்டாவது
உலக சுகாதார நிறுவனத்தின் வரலாற்றில் இது போன்ற ஒரு பிரகடனம் வெளியாவது இது இரண்டாவது முறைதான். 2009ம் ஆண்டில் பன்றிக்காய்ச்சல் பரவியபோது இது போன்ற பிரகடனம் வெளியிடப்பட்டது. கடந்தாண்டில் 417 பேருக்கு போலியோ தாக்கியதாக கூறும் சுகாதார அமைப்பு, இந்தாண்டு ஏப்ரல் 30ம்தேதி வரையில் 68 பேருக்கு போலியோ தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி பயமுறுத்துகிறது.
பட்டியலை பாருங்கள்
பாகிஸ்தான், சிரியா மற்றும் கேமரூனைத் தவிர, ஆப்கானிஸ்தான், ஈக்வட்டோரியல் கினியா, எதியோப்பியா, ஈராக், இஸ்ரேல் ,சோமாலியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளும் புதிய வகை போலியோ வைரஸை பரப்பும் ஆபத்தைத் தோற்றுவிக்கும் நாடுகள் என்று உலகச் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டிருக்கிறது.
பாகிஸ்தான் முக்கிய காரணம்
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து தரும் சுகாதாரப் பணியாளர்கள் மீது அங்குள்ள மத அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி விரட்டிவிட்டனர். எனவே இந்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுமார் 14 ஆண்டுகளாக போலியோ தொற்று ஏற்படாமல் இருந்த சிரியாவில் இப்போது பாகிஸ்தானிலிருந்து வைரஸ் பரவியதால் இந்தத் தொற்று மீண்டும் பரவியுள்ளது. சிரியாவிலிருந்து அங்கு நிலவும் போர்ச்சூழல் காரணமாக, மக்கள் அகதிகளாக ஜோர்டான், லெபனான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் எல்லோருக்கும் போலியோ தடுப்பு மருந்து தரப்பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிப்பது முடியாத காரியமாகிவிட்டது.
இந்த சர்வதேச அவசரநிலையை சமாளிக்க ஒருங்கிணைக்கப்பட்ட பதில் நடவடிக்கை அவசியம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.