தமிழர் திருநாள் கொண்டாட்டம்.. பொங்கல் சாப்பிட்ட டல்லாஸ் மாடு !
டல்லாஸ் (யு.எஸ்): மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உறி அடித்தல், கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம் என்ற தமிழர்களின் விளையாட்டுகளுடன், மாட்டுக்கு பொங்கல் படைத்து கொண்டாடினர்.
இதற்காக பிரத்தேயகமாக மாடு ஒன்று தொலை தூர நகரத்திலிருந்து மாடு ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது.
ஃப்ளோரிடாவிலிருந்து வந்த கரும்பு
டி.எஃப்.டபுள்யூ கோவில் வளாகத்தில் பகல் 12 மணிக்கு மதிய உணவுடன் விழா ஆரம்பமானது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மேடை நிகழ்ச்சியில் பல்வேறு நடனங்கள் இடம்பெற்றன. பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கோலம் போட்டு, கரும்பு மஞ்சள் என அனைத்து பொருட்களுடனும் பொங்கல் படைத்தனர். நம்மூர் தேனிக் கரும்பு போன்ற கருப்பு கரும்பு, ஃப்ளோரிடாவிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தது.
போட்டிகள்
கோலப் போட்டி, சக்கரைப் பொங்கல் போட்டி, ஓவியப் போட்டியுடன், பாரம்பரிய உடைப் போட்டியும் நடந்தது. சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டி, சாக்கு போட்டிகள் நடைபெற்றன. உச்சகட்ட கொண்டாட்டமாக உறி அடித்தல் போட்டியும் இடம் பெற்றது. கயிறு இழுக்கும் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஆச்சரியத்துடன் மாட்டைப் பார்த்த சிறுவர்கள் மிகவும் உற்சாகத்துடன் அதனுடன் விளையாடிப் பார்த்தனர்.
2000 பேருக்கு உணவு படைத்த 30 பேர்
டல்லாஸ் தமிழ்ச்சங்க வரலாற்றில் முதன் முறையாக தன்னார்வக் குழுவினர்கள் சமையல் செய்து அறுவகை உணவு பரிமாறப்பட்டது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை உணவுக்கூடம் தொடர்து செயல்பட்டுக்கொண்டே இருந்தது. மதிய உணவு முடிந்ததும், பக்கோடா, வடை, காபி, டீ என அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது.. இரவு சுமார் 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இவை அனைத்தும் முப்பது பேர் கொண்ட தன்னார்வக் குழுவினர் செய்திருந்தார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
கோவில் திருவிழா
அரங்க நிகழ்ச்சிகள், வெளிப்புற போட்டிகள், உணவுக்கூடம் என விழா நடைபெற்ற கோவில் வளாகம் முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது. பதினைந்துக்கும் மேற்பட்ட முந்தய கமிட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது கைப்பட வரைந்த ஓவியங்களை முந்தைய தலைவர் கீதா அருணாச்சலம் பரிசாக அளித்தார். உப தலைவர் சித்ரா மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் கால்டுவெல், செயலாளர் புகழ், பொருளாளர் ரவி ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
-இர தினகர்