சவூதியில் களை கட்டிய பொங்கல் விழா.. அசத்திய செந்தமிழர் பேரவை!
ரியாத்: சவூதி அரேபியாவில் பொங்கல் விழா களை கட்டியது. சவூதி செந்தமிழர் பேரவை இந்த விழாவை நடத்தியது.
உலகெங்கும் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பல நாடுகளின் தலைவர்களும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சவூதி அரேபியாவிலும் தமிழர்கள் ஒன்று கூடி பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
சவூதி செந்தமிழர் பேரவை
சவூதி செந்தமிழர் பேரவை நடத்திய இரண்டாம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பெருவிழா நடைபெற்று முடிந்தது, இதில் சுமார் இருநூறு தமிழர்கள் சாதி, மத வேறுபாடின்றி நாம் தமிழர்களாய் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல போட்டிகள்
பல்வேறு விதமான போட்டிகளும் பங்கேற்பாளர்களுக்காக நடத்தப்பட்டது. பெண்களுக்கு, ஆண்களுக்கு, குழந்தைகளுக்கு என விதம் விதமாக போட்டிகள் பிரித்து நடத்தப்பட்டன.
திருக்குறள் ஒப்புவிப்பு போட்டி
இதில் குழந்தைகளுக்கான திருக்குறள் ஒப்புவிப்பு போட்டி, ஆண்களுக்கான போட்டி (உறியடி, சிலம்பம் சுற்றுதல் & கபடி), பெண்களுக்காக இசை நாற்காலி என சிறப்பாக நடைபெற்றது.
சிறப்புப் பட்டிமன்றம்
இறுதியில் தமிழர்களின் பாரம்பரியம் மற்றவர்களால் மறைக்கப்படுகிறது - தமிழர்களால் மறக்கப்படுகிறது என்ற தலைப்பில் பட்டிமன்றமமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருத்தினராக உதிர துளிகள் என்ற அமைப்பிலிருந்து பிரேம் நசிர், இந்திய தூதரகத்தில் இருத்து வெங்கடேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற உறவுகளுக்கு சான்றிதழ்களும் வழங்கபட்டது.
செய்தி+ படங்கள்: இரவி, சவூதி அரேபியா