சின்ன அறை.. கடித்துத் தின்ன கரும்புத் துண்டுகள்.. சந்தோஷ பொங்கல்.. இது அமெரிக்காவில்!
சிகாகோ: தமிழகத்தைப் போல பிற நாடுகளிலும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை விசேஷமாகவே கொண்டாடி முடித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்த ஒரு குட்டி ரவுண்டப்.
பொங்கல் வைச்சு கரும்பு சாப்பிட்டு ஜோராக பொங்கலை கொண்டாடி முடித்திருக்கிற இந்த நேரத்தில அமெரிக்காவில் எல்லாம் பொங்கல் உண்டா எண்டு சொந்தங்களிடம் தொலைபேசியில் பேசும்போது கட்டாயம் கேட்டிருப்போம். அதற்கான விடையை அங்க பொங்கல் வேளையில் என்ன செய்கிறார்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம்ம ஊரில் பொங்கல் என்றால் வரிசையாக நாலு நாள் விடுமுறை விட்டு கிட்டத்தட்ட அந்த வாரமே விடுமுறை மாதிரி தான். இது ஒரு பெரிய கொண்டாட்டம் தான். ஆனால் அயல் தேசத்தில் இருந்துகொண்டு நம்ம பண்டிகைக்கு கட்டாயம் விடுமுறை எதிர்பார்க்க முடியாது. ஆமா ஒரு நாள் கூட லீவு கிடையாது.
விடாத பாரம்பரியம்
நம்ம மக்கள் அலுவலகம் போனாலும் கூட காலையில் எழுந்ததும் பூஜை, மாலை வீட்டுக்கு வந்ததும் சம்பிரதாயங்களை செய்வது என்றும், சாமிக்கு படையல் செய்வது என்றும் எதையும் விட்டு வைக்காமல் கண்டிப்பாக பாரம்பரிய வழக்கங்களை பின்பற்றுகிறார்கள்.
கரும்புத் துண்டுகள்
நம்ம ஊரில் கட்டு கட்டா கரும்பு வாங்கி கண்டிப்போம். இங்க தூரமா இருக்கிற கடைக்கு காரில் அதற்கெனவே தேடி போய் மஞ்சள் கரும்பு என்று தேடி பிடிக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நம்மவர்கள் வாங்கிட்டு வந்துருவாங்க. ஆனா என்ன வித்தியாசம் என்று பார்த்தா நம்ம ஊரில் கட்டு கட்டா கரும்பு சாப்பிட்ட நாம இங்க குட்டி குட்டியா வெட்டி வச்சிருக்கிற துண்டு கரும்பை வாங்கி வரும்போது கண்டிப்பா நம்ம ஊர் மண்வாசனை ஒட்டிய நீளமான கரும்புகளை மட்டும் இல்லைங்க நம்ம ஊரு மண்வாசனையும் மனசு தேடும்.
மணக்கும் பொங்கல்
எது எப்படியோ அவங்க அவங்க இருக்கிற இடத்திலே சின்னதா ஒரு இரண்டு அறை கொண்ட வீட்டிலும் கூட சின்னதா பூஜை மேசை வைத்து ,அழகா படையல் வைத்து , பொங்கல் வைத்து, சிறப்பா கொண்டாடி முடிக்கிறாங்க. எல்லா வீடும் வண பொங்கலும் சர்க்கரை பொங்கலுமாய் மணக்கிறது.
வகை வகையா சமைத்து
நம்ம தமிழ் மக்கள் வடை பாயசம், பொங்கல் என்று வகையா செய்து சாப்பாட்டில் கலக்குறாங்க. தெலுங்கு மக்கள் அந்த நாட்களில் குட்டி குட்டி கொலு வைப்பது, குழந்தைகளை வரிசையா அமர வைத்து தலையில் அரிசி போடுவது என்று அவர்கள் வழக்கப்படி கொண்டாடுகிறார்கள். இன்னும் கொஞ்ச மேலே போனா வட மாநிலத்து காரர்கள் எல்லாம் சங்கராந்தி என்று சொல்லிக்கொண்டு அவங்க பாரம்பரிய வழக்கப்படி எள்ளுருண்டை செய்து நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
தழையத் தழைய சேலை கட்டி
தேசத்தை விட்டு தூரமாய் இருந்தாலும் அந்த தேசத்தின் பாரம்பரியமான சேலை வேட்டி அணிந்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை, ஜிப்பா , வேட்டி சட்டைனு போட்டு அழகு பார்க்கிறார்கள். இது மட்டும் இல்லைங்க அந்த அந்த ஊரின் தமிழ் சங்கங்கள் வார இறுதியில் பொங்கல் விழா வைத்து எல்லோரும் கூடுகிறார்கள்.
சிகாகோ பொங்கல்
அமெரிக்காவில் சிகாகோ நகரில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நம் தென் இந்திய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சந்தித்து பாரம்பரிய உணவுகளை பகிர்ந்து அன்போடு கொண்டாடிய ஒரு பொங்கல் சந்திப்பின் பதிவை நீங்களும் இந்த வீடியோவில் கண்டு களிக்கலாம்.
- Inkpena சஹாயா