கடல் கடந்து கொண்டாடப்பட்ட தமிழர் திருவிழா.. இது தைவான் கோலாகலம்
தைபே:பாரம்பரிய தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை கடல் கடந்து.. தைவான் நாட்டில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகை வழக்கம் போல... இந்த ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயற்கை கடவுளான சூரியனை வழிபட்டு, பொங்கல் உண்டு தமிழகத்தில் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர்.
பண்டிகை முடிந்த நிலையில்.. நகரங்களில் இருந்து சொந்த ஊர் சென்று இருந்தவர்கள் மீண்டும் தமது கூட்டுக்குள் செல்ல தொடங்கினர். ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம், எருதுபந்தயம் என அந்தந்த பகுதிகளில் இருந்த மக்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகையை வீட்டில் கொண்டாடிய குடும்பத்தினர் பலர், விடுமுறையை கழிக்க சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். எங்கு பார்த்தாலும் கொண்டாட்ட நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க... தமிழகத்தை தாண்டியும் பொங்கல் பண்டிகை உலக நாடுகளில் கொண்டாடப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் பொங்கல்
சீனாவில் கோலமிட்டு.. விளையாட்டு போட்டிகளுடன் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டாலும் தைவான் நாட்டில் கொண்டாடப் பட்ட பொங்கல் பண்டிகை வழக்கத்துக்கு மாறாக அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.தைவான் தமிழ் சங்கத்தின் 2019ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாட்டம் தலை நகரான தைபேயில் உள்ள சாங் யுங் ஃபா உள்ளரங்கத்தில் நடைபெற்றது. தைவான் தமிழ்ச்சங்கம் ஆரம்பித்து 6 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
600 பேர் கலந்துகொண்டனர்
2013ஆம் ஆண்டில் 200 பேர் கூடிய பொங்கல் விழா, இன்றைய தினத்தில் 600 க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. இந்தியா மற்றும் தைவான் கலாச்சசர்த்திற்கு ஒரு இணைப்பு பாலாமாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கம் நடத்தும் 'விழுதுகள் தமிழ்ப் பள்ளி' தைபே மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு இவ்விழா இனிதே தொடங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் சங்கத்தின் துணைப் பொதுசெயளாலர் பொன்முகுந்தன் வரவேற்று உரையாற்றினார்.
விழா பெற்றி பெற வாழ்த்து
விழாவினை சங்கத்தின் தலைவரும், திருக்குறளை சீன மொழிக்கு மொழி பெயர்த்த கவிஞருமான யூசி, இந்திய தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர் ஸ்ரீதரன் மதுசூதனன், பூ ஜென் பல்கலைக்கழகத்தின் நிர்வாகி அருட்தந்தை ஜேம்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தைபே நகர இந்திய மக்களுக்கான இந்திய கலாச்சார குழு தைபே குழும தலைவர் ராஜன் கேரா, தைவான் இந்தியன் கிளப்பின் தலைவர் மனிஷ் ஷா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். விருந்தினர்கள் அண்டி ஆர்யா, ஜெஃப்ரி மற்றும் டினா சென் ஆகியோர் விழா வெற்றி பெற வாழ்த்தினர்.
சான்றிதழ்கள் அளிப்பு
விழாவில், கடந்த கல்விஆண்டில் விழுதுகள் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டன. இந்திய மாணவ சமுதாயத்தினரின் பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வண்ணம், தைவான் தமிழ்ச்சங்கம் வருடம் தோறும் நடத்தும் 3 நிமிட பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சங்கத்தின் தலைவர் யூசி மற்றும் துணைத்தலைவர் சங்கர் ராமன் சான்றிதழ்களும் ரொக்கப்பரிசும் வழங்கினார்கள்.
காவடியாட்டம், ஒயிலாட்டம்
சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் கடந்த ஆண்டில் தைவான் தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகளை விவரித்து கூறினார். சுபஸ்ரீ ஷிவானி, இராவனேஸ்வரன் இயற்றிய சிவ தாண்டவ நடனத்தை ஒடிசி நடன வடிவில் அரங்கேற்றி, அனைவரின் பாராட்டுகளை பெற்றார்.சங்கரிப்பிரியா மற்றும் ஸ்வேதா இருவரும் தமிழர்களின் கிராமிய நடனமான ஒயிலாட்டம் மற்றும் காவடி ஆட்டத்தை நடனமாக ஆடி காண்போரை தமிழகத்திற்கே அழைத்துச்சென்றனர். விழுதுகள் தமிழ்ப்பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் காண்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
புல்லாங்குழலில் பாடல்
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, தைவானை சேர்ந்த ஷு மன்னி, தென்றல் வந்து தீண்டும் போது பாடலை புல்லாங்குழலில் இசைத்து பார்வையாளர்களை இன்னிசை மழையில் நனையவிட்டார். மேலும் இந்திய மற்றும் தைவான் நடனக்குழுவினரின் ஆடல் மற்றும் பாடல் என்று இப்பொங்கல் விழா ஒரு கலாச்சாரத் திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது.
மும்மொழிகளில் உரை தொகுப்பு
பொங்கல் விழா தமிழ், ஆங்கிலம் மற்றும் சீன மொழி என்று மும்மொழிகளில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுத்து வழங்கப்பட்டது. பின்னர், விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர் சுமார் 600 பேருக்கு சர்க்கரை பொங்கலுடன் கூடிய அறுசுவை விருந்தும் பரிமாறப்பட்டது. நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொதுசெயலாளர் ஆகு பிரசண்ணன் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது.