புதிய காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள்...: போப் ஆண்டவர் சாடல்
எல் அல்டோ: உலகில் புதியதாக உருவாகியுள்ள பல முகங்களைக் கொண்ட நவீன காலனியாதிக்கத்தை எதிர்க்க திராணியற்ற கோழைகளாக உலகத் தலைவர்கள் இருப்பதாக போப் ஆண்டவர் முதலாம் ஃப்ரான்சிஸ் சாடியுள்ளார்.
பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு 8 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள போப் ஆண்டவர் பொலிவியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
தற்போதைய சமூக அமைப்பு முறையானது சகிக்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. தொழிலாளர்களும் விவசாயிகளும் சகிக்க முடியாதவர்களாக உள்ளனர்.
தற்போதைய புதிய காலனியாதிக்கம் பல முகங்களைக் கொண்டதாக இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், கடன் நிறுவனங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் போன்ற புதிய காலயனியாதிக்கத்துக்கு எதிராக ஏழை எளிய மக்கள் போராட வேண்டும். தகவல் தொடர்புத் துறையை ஏகபோகமாக்கிக் கொள்கிற போக்கு தற்போது உருவெடுத்து வருகிறது. இதை எதிர்த்து தற்போதைய தலைவர்கள் போராட துணிவற்ற கோழைகளாக இருக்கின்றனர்..
அமெரிக்க பூர்வகுடி மக்களுக்கு கடவுளின் பெயரால் கத்தோலிக்க சர்ச்சுகள் இழைத்த கொடுமைகளுக்காக பாவ செயல்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்படுகின்றனர். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது 3வது உலகப் போர்.
இவ்வாறு போப் ஆண்டவர் பேசினார்.
சர்ச்சை நினைவுப் பரிசு
பொலிவியா பயணத்தின் போது போப் ஆண்டவருக்கு பொலிவியா அதிபர் எவோ மோரலெஸ் நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார். அந்த நினைவுப் பரிசு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது கம்யூனிச சின்னத்தைக் குறித்தும் அரிவாள் சுத்தியலில், சுத்தியல் பகுதியில் யேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பதாக அந்த நினைவுப் பரிசு அமைந்துள்ளது. ஏற்கெனவே கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கையை கம்யூனிச சித்தாந்தம் பேசும் லத்தீன் அமெரிக்கா நாடுகள் மேற்கொண்டிருக்கின்றன. தற்போதைய பொலிவிய அதிபரும் கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்..
தற்போது கம்யூனிச சின்னத்தில் யேசுவை சிலுவையில் அறைந்திருக்கும் நினைவுப் பரிசை போப் ஆண்டவருக்கு பொலிவியா அதிபர் கொடுத்திருப்பது சர்ச்சையாகி வருகிறது.