கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முயல்களை போன்று வதவதவென குழந்தைகள் பெறத் தேவையில்லை: போப்
ரோம்: நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முயல்கள் போன்று வத வதவென குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு வாடிகன் திரும்பியுள்ளார். வாடிகன் திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முயல்களை போன்று குழந்தைகள் பெறத் தேவையில்லை. 7 குழந்தைகளை பெற்ற தாய் ஒருவர் 8வது முறையாக கர்ப்பமாக இருந்தார். அவரிடம் உங்களின் 7 குழந்தைகளையும் அனாதையாக விட்டுச் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவரோ எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.
சிலர் நல்ல கத்தோலிக்கர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் முயல்களை போன்று இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். புதிய உயிரை உருவாக்குவது திருமணத்தின் ஒரு பங்கு ஆகும். அதற்காக கிறிஸ்தவர்கள் வரிசையாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை என்றார்.
பிரான்சிஸ் போப் ஆண்டவராக பொறுப்பேற்றதில் இருந்து பல புதிய எண்ணங்களை வெளியிட்டு வருகிறார். வாடிகன் வழக்கத்தை மாற்றி வரும் முதல் தென்னமெரிக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் தான்.
அவர் ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுபவர். பிற மதத்தினரையும் சந்தித்து உரையாடி மகிழ்பவர். தனக்கு கடிதம் எழுதம் பாமர மக்களுக்கும் அவ்வப்போது போன் செய்து பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.