கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட போப் ஆண்டவர்!
வாடிகன்: கத்தோலிக்கர்களின் தலைவராக அறியப்படும் போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
உலகில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி கத்தோலிக்க தலைநகர் வாடிகனில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், 84 வயதாகும் போப் பிரான்சிஸ் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்டார். இத்தகவலை வாடிகனும் உறுதி செய்துள்ளது.
அதேபோல முன்னாள் போப் ஆண்டவரான 93 வயதாகும் போப் பெனடிக்ட்டிற்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. வயது காரணமாக இருவரும் அதிக ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பதால், கொரோனா தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு என்ன கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டது, எப்போது தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியிருந்தார்.
கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வது ஒருவரது சொந்த விருப்பம் என்றாலும்கூட சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வாடிகன் நகரில் இதுவரை 27 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் அங்குத் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.