கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் போப் பிரான்சிஸ் சந்திப்பு- நல்லுறவு குறித்து வலியுறுத்தல்!
ஹவானா: அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு 10 நாள் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் கியூபா தலைநகர் ஹவானாவில் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸட்ரோவை சந்தித்தார்.
அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு பத்து நாட்கள் பயணமாக சென்றுள்ள போப் பிரான்சிஸ் இதுவரை அந்த இரு நாடுகளுக்கும் சென்றதில்லை. அவர் போப்பாக பதவியேற்ற பிறகு எதிரிகளாக இருந்த அமெரிக்காவும், கியூபாவும் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள வலியுறுத்தி பல நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
பத்து நாள் பயணத்தின் முதற்கட்டமாக கியூபா தலைநகர் ஹவானாவில் உரையாற்றிய போப் அமெரிக்கா மற்றும் கியூபா சமாதான நிலைப்பாட்டை மேற்க் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஹவானாவின் புரட்சி சதுக்கத்தில் நடந்த பேரணியிலும் அவர் கலந்து கொண்டார். இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய போப், இரு நாடுகளும் நெருக்கமாகி வரும் இந்த நேரத்தில் சித்தாந்தத்தினால் ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் கியூபா மக்களை கேட்டுக் கொண்டார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக க்யூபா மீது பொருளாதாரத் தடையை விதித்துள்ள அமெரிக்கா, அண்மையில் அதை தளர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அறிவித்தது. இதை தொடர்ந்து எதிரி நாடுகளான இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் போப் பிரான்சிஸின் இந்த பத்து நாள் பயணம், அமெரிக்க கியூபா இடையே சமாதான நிலைப்பாட்டை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.