வாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன போப் ஆண்டவர்!
அடுத்த ஆண்டு முதல் வாடிகன் சிட்டியில் சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
ரோம் : மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் சிகரெட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக போப் ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில் போப் ஆண்டவரே ஆளுமையின் தலைமையாக உள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத் தலமாகவும், சுற்றுலா நகரமாகவும் திகழும் வாடிகன் நகருக்கு வருமானத்தை அளிப்பதில் சிகரெட் விற்பனை முக்கிய பங்காற்றுகிறது. இத்தகைய சூழலில் தான் போப் ஆண்டவர் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதாலியின் சுற்றுவட்டாரங்களை விட வாடிகன் சிட்டியில் உள்ள ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வரிகள் இல்லாமல் சலுகை விலையில் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ரோம் நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் வாடிகனில் உள்ள நண்பர்கள் மூலம் குறைந்த விலையில் சிகரெட்டுகளை பெற்றுச் சென்றனர்.
கறாராகச் சொன்ன போப்
ஆனால் அடுத்த ஆண்டு முதல் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக போப் ஆண்டவேரே உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவலை வாடிகன் சிட்டி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனில் சமரசம் செய்ய முடியாது
போப் ஆண்டவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் உடல்நலனை பாதிக்கும் விஷயத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உலக சுகாதார மைய புள்ளி விவரங்கள்படி ஆண்டிற்கு 70 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழப்பதாகக் கூறுகிறது.
லாபம் மட்டுமே நோக்கமல்ல
ஆனால் மக்களின் வாழ்க்கையை பணயம் வைத்து லாபம் சம்பாதிக்க முடியாது. எனவே வாடிகன் சிட்டியில் அடுத்த ஆண்டு முதல் கட்டாயம் சிகரெட் விற்பனை செய்யக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிப்பால் ரூ. 72 கோடி நஷ்டம்
வாடிகன் சிட்டி மக்களும், இங்கு சுற்றுலா வருவோரும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டுமே என்பதை கணக்கில் கொள்ளும் போது லாபம் பொருட்டல்ல என்று வாடிகன் சிட்டி அறிக்கையில் கூறியுள்ளது. போப் ஆண்டவரின் இந்த அறிவிப்பால் சுமார் ரூ. 72 கோடி அளவிற்கு வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.