கேரளா கன்னியாஸ்திரி மரியம் திரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கினார் போப் பிரான்சிஸ்
வாடிகன்: கேரளா கன்னியாஸ்திரி மறைந்த மரியம் திரேசியாவுக்கு இன்று வாடிகன் நகரில் இன்று புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.
கேரளாவின் திருச்சூரில் 1876-ம் ஆண்டு பிறந்த மரியம் திரேசியா, 1914ல் அருட்சகோதரிகளுக்கான திருக்குடும்ப சபையை உருவாக்கினார். இந்த சகோதரிகள் சபை மூலம் ஏராளமான ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
1926-ம் ஆண்டு தமது 50-வது வயதில் மரியம் திரேசியா காலமானார். அவரது மனிதநேய சேவையைப் பாராட்டும் வகையில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் பிரான்சிஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
வாடிகனில் புனிதர் பட்டம்
வாடிகன் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன் தலைமையிலான குழு பங்கேற்றது.
2000-ல் அருளாளர் பட்டம்
முன்னதாக 2000-ம் ஆண்டு மரியம் திரேசியாவுக்கு அருளாளர் என்ற பட்டத்தை அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் வழங்கியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் செப்டம்பர் 29-ல் தமது வானொலி உரையில் மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட இருப்பதை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
கேரளாவுக்கு 4வதாக புனிதர் பட்டம்
கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அல்போன்சா, சகோதரி எவுப்ராசியம்மா, அருட்தந்தை குரியக்கோஸ் எலியாஸ் சவாரா ஆகியோருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 4-வதாக கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
2 அற்புதங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தில் புனிதராக ஒருவர் அங்கீகரிக்கப்படுவதற்கு 2 அற்புதங்கள் செய்திருக்க வேண்டும். மேத்யூ பெல்லிச்சேரி என்ற நபரும், கிறிஸ்டோபர் என்ற குழந்தைக்கும் நோய்களை குணமளித்தார் என்ற அடிப்படையில் மரியம் திரேசியாவுக்கு தற்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.