நான் மார்க்சிஸ்ட் அல்ல: போப் பிரான்சிஸ் விளக்கம்
வாடிகன்: தான் ஒரு மார்க்சிஸ்ட் அல்ல, மார்க்சிய சிந்தாந்தம் தவறானது எனத் தெரிவித்துள்ளார் போப்பாண்டவர்.
அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலைக்குப் பின்னர், கடந்த மாதம் போப் பிரான்சிஸ், ‘நியாயமற்ற பொருளாதாரக் கொள்கைகளும், முறைப்படுத்தப்படாத முதலாளித்துவமும் அராஜகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
போப் பிரான்சிஸின் இந்தக் கருத்தை அமெரிக்க பழமைவாதிகள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதற்கு விளக்கமளிக்கும் விதமாக தற்போது இந்த விளக்கத்தைப் போப் அளித்துள்ளார்.
இது தொடர்பாக, போப் பிரான்சிஸ் இத்தாலியிலிருந்து வெளியாகும் ‘லா ஸ்டாம்பா' நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
தவறான சித்தாந்தம்...
மார்க்சிய சித்தாந்தம் தவறானது. அதே சமயம், மார்க்சிய சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் நல்ல மனிதர்களை எனது வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை.
எனது கருத்து...
தற்போதுள்ள உலகப் பொருளாதார அமைப்பால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளதை கண்டித்து கருத்து தெரிவித்தேன். அது வல்லுநரின் பார்வையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. கத்தோலிக்க திருச்சபையின் சமூகக் கோட்பாடுகளுக்கு உட்பட்டே அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.
நான் மார்க்சிஸ்ட் அல்ல...
அத்தகைய கருத்தை தெரிவித்ததால் என்னை மார்க்சிஸ்ட் எனக் கருதக்கூடாது" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுமூக உறவு....
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி சிந்தனைகள் சார்ந்த முற்போக்கு இறைமை யியல் இயக்கத்தினரின் செயல்பாடுகளுக்கு எதிராக விமர்சனம் செய்து வந்த போப், சமீபத்தில்தான் அந்த இயக்கத்தினருடன் சுமூகமான உறவை மேம்படுத்த முயற்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.