கிறிஸ்தவ மதத்துக்கும், "Big Bang" கொள்கைக்கும் எந்த முரண்பாடும் இல்லை.. போப்பாண்டவர்
வாடிகன் சிட்டி: இந்த அண்டம் எப்படி உருவானது என்பதை விளக்கும் பிக் பாங் தியரிக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்று போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிக் பாங் தியரி என்பதை கடவுள் மறுப்பு கொள்கையாக பார்க்கத் தேவையில்லை. சூப்பர் பவர் ஒன்றின் மூலமாக அண்டம் உருவாகியிருக்கலாம் என்றுதான் அது சொல்கிறது. அந்த சூப்பர் பவர் என்பது கடவுள் என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
வாடிகன் சிட்டியில் போப்பாண்டவர் 16வது பெனடிக்டிட்டின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதை போப்பாண்டவர் பிரான்சிஸ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பிக் பாங் தியரியில், இந்த அண்டமானது, குழப்பங்களின் விளைவால் பிறந்ததாக கூறப்படவில்லை. மாறாக சூப்பர் பவர் ஒன்றின் தலையீட்டால் இது உருவாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சூப்பர் பவர்தான் கடவுள். அந்த சூப்பர் பவர் மூலமாகத்தான் உயிர்கள் தழைத்தன, அன்பும் தழைத்தது.
Book of Genesis (பைபிளின் பழைய ஏற்பாடு) நூலில் கூறப்பட்டுள்ளவற்றை சிலர் திரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. கடவுளை ஒரு மந்திரவாதி என்றும், மந்திரக் கோலால் இந்த உலகையும், உயிர்களையும் அவர் சி்ருஷ்டித்தார் என்றும் சிலர் தவறாக கருதுகிறார்கள். அது தவறு.
அவர் உயிர்களை உருவாக்கினார். ஆனால் உயிர்கள் தழைத்து வளர்வதை விதிப்படி அவர் விட்டு விட்டார். எனவே ஒவ்வொரு உயிரும் சுயமாக வளர்ந்து முழுமை அடைந்தன.
இப்போதுள்ள உயிர்களின் வடிவத்தை அடையும் வரை உயிர்களின் உருவாக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரமாண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டே வந்துள்ளது என்றார் பிரான்சிஸ்.