அதிகரிக்கும் இஸ்லாமிய வன்முறையால் கிறிஸ்தவர்களிடையே வலுப்பெறும் ஒற்றுமை.. போப்பாண்டவர்
வாடிகன்சிட்டி: இஸ்லாமிய மற்றும் பிற வன்முறைகளால், கிறிஸ்தவர்கள் இடையே ஒற்றுமை வலுப்பட்டு வருவதாக போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சண்டைகள், மோதல்கள், வன்முறைகளால் கிறிஸ்தவர்களிடையே ஒற்றுமை வலுப்பட்டு வருவதாக எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவ தலைவர் அபுனா மத்தியாஸுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்தார் போப்பாண்டவர்.
சமீபத்தில் கியூபாவில் ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் தலைவரை சந்தித்தபோதும் கூட இதையே போப்பாண்டவர் அவரிடம் குறிப்பிட்டு, உலகெங்கும் கிறிஸ்தவர்களிடையே, ஒற்றுமை வலுப்பெறுவது குறித்து விவாதித்தார். மேலும் மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் கிறிஸ்தவர்கள் சந்தித்து வரும் சவால்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
வாடிகன்சிட்டியில், அபுனா மத்தியாஸ் போப்பாண்டவரைச் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்புக்குப் பின்னர் பேசிய போப்பாண்டவர், பல்வேறு பிரச்சினைகளில் கிறிஸ்தவ சமுதாயத்தினர் பிரிந்து கிடந்தாலும்கூட, தற்போது பெருகி வரும் இஸ்லாமிய வன்முறையும், பிற வன்முறைச் சம்பவங்களும் அவர்களை ஒருங்கிணைத்து வருகின்றன.
பல்வேறு சம்பவங்களில் கிறிஸ்தவர்கள் சிந்திய ரத்தங்கள், கிறிஸ்தவர்களின் ஒற்றுமைக்கான விதையாக அமையும் என்று கூறினார் போப்பாண்டவர்.
லிபியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடற்படையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எத்தியோப்பாவியாவைச் சேர்ந்த 28 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கண்டனம் தெரிவித்து எத்தியோப்பிய கிறிஸ்தவ சபைக்கு கடிதம் எழுதியிருந்தார் போப்பாண்டவர்.
இந்த நிலையில் தற்போது மத்தியாஸுடன் நடந்த சந்திப்புக்குப் பின்னர் அவர் கூறுகையில், எத்தியோப்பிய கிறிஸ்தவ சமூகம், தியாகிகளின் சபையாக மாறியுள்ளது என்றார்.
உலகில் உள்ள மிகப் பழமையான ஆர்த்தோடாக்ஸ் சர்ச்சுகளில் ஒன்றாக திகழ்கிறது எத்தியோப்பிய ஆர்த்தோடாக்ஸ் சர்ச். இந்த சர்ச்சில், யூதர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.