6 குழந்தைகள் உட்பட 12 சிரியா முஸ்லீம் அகதிகளுக்கு தஞ்சம் அளித்த போப் ஆண்டவர்
லெஸ்பாஸ்: கிரீஸ் நாட்டின் மொரியா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிரியா அகதிகளில் 12 பேரைத் தன்னுடன் வாடிகனுக்கு அழைத்து தஞ்சம் தந்துள்ளார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.
உள்நாட்டுப் போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அந்தவகையில், கிரீஸ் நாட்டில் லெஸ்பாஸ் தீவில் உள்ள மொரியா முகாமில் 3 ஆயிரம் அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் (79) நேற்று அந்த முகாமிற்கு சென்று, அங்கிருந்த அகதிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த அகதிகள் அவரது காலில் விழுந்து வணங்கி, தங்களைக் காப்பாற்றும்படி கண்ணீர் விட்டு அழுதனர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெண் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி போப் ஆண்டவரை கண்ணீருடன் சந்தித்தார். அவரது பரிதாப நிலையை பார்த்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் கண்ணீர் வடித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் "நீங்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அல்ல. நாம் அனைவரும் குடிபெயர்ந்து வந்த அகதிகள்தான். நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்" என ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இந்த பயணத்தின் போது, அங்கு தங்கியிருந்தவர்களில் 6 குழந்தைகள் உட்பட முஸ்லீம் அகதிகள் 12 பேரை அவர் தன்னுடன் வாடிகனுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் 12 பேரும் குண்டு வீச்சில் தங்கள் வீடுகளை இழந்து அகதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.