அகதிகளோடு அகதிகளாக ஐஎஸ் தீவிரவாதிகளும் ஐரோப்பாவில் ஊடுறுவலாம்.. போப்பாண்டவர் எச்சரிக்கை
ரோம்: ஐரோப்பாவுக்கு அலை அலையாக வரும் அகதிகளுடன் அகதிகளாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக எச்சரிக்கையுடன் ஐரோப்பிய நாடுகள் இருக்க வேண்டும் என்று போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.
சிரியாவிலிருந்தும், லிபியாவிலிருந்தும் இன்ன பிற நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கில் அகதிகள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் இவர்களை ஏற்க ஐரோப்பிய நாடுகள் மறுத்து வந்தன.
ஆனால் சிரியாவைச் சேர்ந்த சிறுவன் ஐலான் மிகப் பரிதாபமான நிலையில் கடலில் மூழ்கி இறந்து கரையொதுங்கிய கோரக் காட்சியால் உலகமே நடுங்கிப் போனது. இதையடுத்து பல ஐரோப்பிய நாடுகள் அகதிகளை அனுமதிக்க ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில்தான் தீவிரவாதிகள் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் போப்பாண்டவர். ஆயிரக்கணக்கில் வரும் மக்களுடன் கலந்து தீவிரவாதிகளும் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுறுவ முயலலாம் என்று அவர் கூறியுள்ளார்.
வானொலிப் பேட்டி
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒரு வானொலிக்கு அவர் அளித்த பேட்டியின்போது பேசுகையில், முன்பு போல இப்போது நிலைமை இல்லை. ஐஎஸ் தீவிரவாதிகள் அப்பாவி மக்களுடன் இணைந்து கலந்து அகதிகள் என்ற போர்வையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளது.
லிபியாவிலிருந்தும் வரலாம்
லிபியாவிலும் தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் நிலை கொண்டுள்ளனர். அங்கிருந்தும் அவர்கள் வரலாம். சிசிலி நகரிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் தீவிரவாதிகள் உள்ளனர். இவர்கள் இங்கு ஊடுறுவி வர அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதை மறுக்க முடியாது.
ரோமையும் குறி வைக்கலாம்
தீவிரவாதிகளின் குறி ரோம் நகரமாகவோ அல்லது வாடிகன் சிட்டியாகவோ கூட இருக்கலாம். இதை மறுக்க முடியாது. நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லதுதான்.
தீவிரவாதிகளால் தாக்கப்பட முடியாத நகரம் அல்ல
ரோம் நகரமும், வாடிகன் சிட்டியும் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கக் கூடிய நகரம் என்று சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
நாங்கள் அடைக்கலம் தருவோம்
அப்பாவி அகதிகளுக்கு வாடிகன் சிட்டி நிச்சயம் அடைக்கலம் தரும். அவர்களுக்கான இடங்கள் இருந்தால் நிச்சயம் அங்கு அவர்கள் தங்க வைக்கப்படுவார்கள். இங்கு நிறைய இடங்கள் காலியாக உள்ளன. அங்கு அவர்களைத் தங்க வைக்கலாம்.
சமாளிக்க யோசிக்க வேண்டும்
அதேசமயம் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சினைகளில் சிக்கிப் போராடி வருகின்றன. புதிதாக வந்துள்ள அகதிகள் பிரச்சினையையும் அவர்கள் திறம்பட சமாளிக்க வழி காண வேண்டும்.
மகிழ்ச்சி நிரந்தரமல்ல
இந்த உலகில் மகிழ்ச்சி என்பது நிரந்தரமல்ல. இயேசுநாதரே இதற்கு சரியான உதாரணம். அவர் எப்படி இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். கடைசியில் அவருக்கு என்ன கிடைத்தது என்பதையும் நாம் அறிவோம். எனவே உலகில் மகிழ்ச்சி என்பது யாருக்கும் நிரந்தரமானதல்ல.
பாவிகளுக்கு மன்னிப்பு கொடுத்தவர் இயேசுநாதர்
புனித பீட்டர் செய்த மிகப் பெரிய பாவம் அனைவரும் அறிந்ததே. அவர் இயேசுநாதரை நிராகரித்தவர். ஆனால் அவரே பின்னாளில் போப்பாண்டவர் ஆனார். அவருடைய பாவத்தையும் மீறி அவருக்கு பாவ மன்னிப்பு கிடைத்தது. அவரை இயேசுநாதர் பார்த்துக் கொண்டார். இதை நினைத்துத்தான் நான் பல நேரங்களில் ஆறுதல் அடைகிறேன். நாம் என்ன செய்தாலும் அதை ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்றார் முதலாம் பிரான்சிஸ்.