ஷாம்பெயின் பாட்டில் மூடியால் வந்த குழப்பம்... அவசரமாக தரையிறக்கப்பட்ட லண்டன் விமானம்
லண்டன்: லண்டனில் பயணிகள் விமானம் ஒன்று ஷாம்பெயின் பாட்டில் மூடியால் அவசரமாக தரையிறங்கிய வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, பறவை தாக்குதல் என விமானம் தரையிறங்க பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால், லண்டனில் இருந்து துருக்கி சென்ற ஜெட் விமானம் ஒன்று ஷாம்பெயின் பாட்டில் மூடியால் தரையிறங்கியுள்ளது.
லண்டனின் காட்விக் நகரிலிருந்து துருக்கியின் டலாமன் நகருக்கு ஈசி ஜெட்டின் EZY8845 விமானம் பயணிகளோடு சென்று கொண்டிருந்தது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் ஷாம்பெயின் மதுப்பாட்டிலைத் திறக்க முயற்சித்துள்ளார்.
அதிக அழுத்தம் காரணமாக முதலில் மக்கர் செய்த பாட்டிலின் மூடி, பின்னர் பாட்டிலில் இருந்து டப்பென்று சற்று சத்தத்துடன் கழன்று விமானத்தின் சீலிங்கில் மோதியது. இதனால், அனைத்து பயணிகளின் முன்பும், அவசர காலத்தில் ஆக்சிஜன் வழங்கும் மாஸ்க் வந்து விழுந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நடந்தது என்னவென்று அறியாத விமானியும், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறதென அஞ்சி, இத்தாலியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். பின்னர் தான் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆக்சிஜன் முகமூடிகள் பழைய இடத்திலேயே பொருத்தப்பட்டு, விமானம் புறப்பட்டது.
இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், "இப்போது தான் எனக்கு நடந்தது என்னவென்று புரிகிறது. ஆனால் சம்பவம் நடந்த போது இது விளையாட்டானதாக இருக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 7-ம் தேதி நடந்த இந்த சுவையான சம்பவத்தை ஈசி ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நேற்றிரவு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.