நான்சி பவல் ராஜினாமாவில் திரைமறைவு கதைகள் இல்லை... அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பவலின் திடீர் ராஜினாமாவிற்கும் சமீபத்திய சூழ்நிலைகளால் உண்டான பதட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர் 67 வயது நான்சி பவல். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நெருக்கமானவராக நான்சி பவல் கருதப்படுகிறார். ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
இதனால், மோடியுடனும், பாஜகவுடனும் நேசக்கரம் நீட்ட அமெரிக்கா தயாராகிவிட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 13-ந்தேதி, நரேந்திர மோடியை நான்சி பவல் சந்தித்தார். இதற்கிடையே நான்சி பவல் நீக்கப் பட்டு இந்தியாவுக்கான புதிய தூதர் நியமிக்கப்படலாம் என கடந்த ஒரு வாரமாக யூகங்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார் நான்சி பவல். இத்தகவலை டெல்லி அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்நியாவில் 16வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள் சூழ்நிலையில் நான்சி பவலின் திடீர் ராஜினாமா பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவரின் ராஜினாமா முடிவின் பிண்ணனியில் அரசியல் இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், நான்சி பவலின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், ‘நான்சி பவலின் ராஜினாமிற்கு பின்னால் பெரிய திரைமறைவு கதைகள் ஒன்றும் இல்லை. அவர் ஏற்கனவே வரும் மே மாதத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார்' என விளக்கமளித்துள்ளார்.