அமெரிக்காவில் திடீர் கரண்ட் கட்... இருளில் மூழ்கிய வாஷிங்டன்... மக்கள் பீதி!
வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் அருகே மின் நிலையம் ஒன்றில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தலைநகர் வாஷிங்டனி்லும், வெள்ளை மாளிகையிலும் சிறிது நேரம் மின்சாரம் தடைபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல அரசு அலுவலகங்கள் இருளில் மூழ்கியதால் ஸ்தம்பித்துப் போயின.
உள்துறை, நீதித்துறை அலுவலகங்களில் பணிகள் ஸ்தம்பித்தன. மேரிலேன்ட் பல்கலைக்கழகம், உலக வங்கி அலுவலகங்களும் ஸ்தம்பித்தன.
வாஷிங்டனுக்கு தெற்கில் உள்ள மேரிலேன்ட மாகாணத்தில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதே இந்த மின்சாரத் தடைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தீவிரவாதிகள் கைவரிசையோ என்று முதலில் மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. இருப்பினும் மின்சார சப்ளையில் ஏற்பட்ட பாதிப்பே மின் தடைக்குக் காரணம் என்று பின்னர் மேரிலேன்ட் மாகாண அரசு விளக்கம் தந்ததால் பீதி அகன்றது.
தலைநகர் வாஷிங்டன் சில மணி நேர மின்தடையை சந்தித்தது. வெள்ளை மாளிகையிலும் கூட கரண்ட் இல்லை. அதிபர் ஒபாமா அப்போது ஓவல் அலுவலகத்தில் இருந்தார். அங்கு மின்சாரம் தொடர்ந்து இருந்தது. வெள்ளை மாளிகைக்கு பின்னர் மின் சப்ளை துரிதமாக திரும்ப அளிக்கப்பட்டது.
மின்தடை காரணமாக உள்துறை அமைச்சகத்தின் தினசரி செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.