முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதா? கலிதா ஜியா வீட்டு மின்சாரத்தை துண்டித்த வங்கதேச அரசு!!
டாக்கா: 72 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா வீடு மற்றும் அலுவலகத்தின் மின் இணைப்புகளை அந்நாட்டு அரசு துண்டித்துள்ளது.
வங்க தேசத்தில் கடந்த 1991-96, 2001-06 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பதவி வகித்தவர், கலிதா ஜியா. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ந் தேதி நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலை கலிதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி புறக்கணித்து.
இதனால் இத் தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி பெரும்பான்மை பெற்றது. ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்.
தேர்தலில் தில்லுமுல்லு செய்து ஷேக் ஹசீனா பிரதமராகி விட்டதாக கலிதா ஜியா குற்றம் குற்றம்சாட்டி வருகிறார். இதனால் கடந்த 5-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இதைத் ஹொடர்ந்து கலிதா ஜியாவை போலீசார் தடுப்பு காவலில் வைத்தனர். அவரது தடுப்பு காவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலக்கி கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆளும் அரசுக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் நாளை முதல் 72 மணி நேர முழு அடைப்புக்கு கலிதா ஜியா, அழைப்பு விடுத்து இருந்தார். கலிதா ஜியாவின் அழைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரது வீட்டின் மின் இணைப்பு இன்று அதிகாலை 2.37 மணிமுதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு அழைப்பை கட்டாயமாக ரத்து செய்யும் முயற்சியாக அரசு நடத்தும் டாக்கா மின்சார விநியோக நிறுவனம், கலிதா ஜியாவின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு மின் இணைப்பை துண்டித்துள்ளது.