இந்தோனேசியாவை மீண்டும் உலுக்கியது நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜகார்தா: இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இதில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தோனேசியாவின் சுலவேசி தீவு, பலு நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
7.5 என்ற ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, கடல் பல அடி தூரத்துக்கு உள்வாங்கியது. ராட்ஷத கடல் அலைகள் ஆக்ரோஷமாக 10 அடிக்கு மேல் எழுந்து ஊருக்குள் புகுந்தது. இதில் ஏராளமானோர் மாயமாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், இந்தோனேசியாவில் பேரழிவு ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.