இன்னும் பயங்கர நிலநடுக்கம் உலுக்க “வாய்ப்பு” – ஜப்பான் மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பானில் நேற்று முன்தினம் ஏற்பட்டதை விட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிலநடுக்கவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் மே 30ம் தேதி இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து 874 கி.மீ தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 676 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
ரிக்டர் அளவில் 8.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடம் நீடித்தது.இதனால் டோக்கியோவில் கட்டடங்கள் அதிர்ந்தன. டோக்கியோ கோபுரத்தில் ஒரு மணி நேரம் மின் துாக்கிகள் செயல்படாததால் 400க்கும் அதிகமானோர் அந்த வளாகத்தில் சிக்கிக் கொண்டனர்.
ஹனேடா விமான நிலையம் அரை மணி நேரம் மூடப்பட்டது. நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் இல்லை என்ற போதிலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வாரத்திலும் டோக்கியோவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்துடன் தெற்கு ஜப்பானில் உள்ள ஒரு தீவில் எரிமலை திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதனால் சுற்றுப் பகுதிகளில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். ''இந்த அசாதாரண சூழல் 2011 சுனாமியை நினைவுபடுத்துகிறது. அதனால் ஜப்பானில் எந்த நேரத்திலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம். அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்'' என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நான்கு "டெக்டோனிக்" அடுக்குகள் இணையும் மையத்தில் ஜப்பான் அமைந்துள்ளது. அதனால் ஆண்டுதோறும் உலகில் ஏற்படும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20 சதவீதம் ஜப்பானில் நிகழ்கிறது.