அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்
அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாநிலம் அலாஸ்கா. அலாஸ்காவில் உள்ள லிட்டில் சிட்கின் தீவில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 15 மைல்கள் தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 71 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவானது.
இதையடுத்து அலாஸ்காவின் கடற்கரை பகுதிகள் மற்றும் அலூஷியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆடக் நகரில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
நிலநடுக்கம் மிகவும் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி வர வாய்ப்புகள் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு 2 மணிநேரத்தில் 17 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அமெரிக்காவில் உள்ள மாநிலங்களிலேயே அலாஸ்காவில் தான் ஒரு ஆண்டில் பலமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.