திருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்
பிரேசிலியா: பிரேசிலில் திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் பிரீகிளாம்சியா நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சா பாலோவை சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா கியூடெஸ் (30) செவிலியர்.. 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் தனது காதலனை திருமணம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தேவாலயத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரீகிலாம்ஸியாவால் பாதிக்கப்பட்ட அவர் திடீரென பின் கழுத்து வலி ஏற்பட்டது. உடனே வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனிடையே கியூடெக்ஸை திருமணம் செய்யவிருந்த தீயணைப்பு துறை வீரர் ஃபிலேவியோ கான்கல்வெஸ் வர தாமதமானதை எண்ணி கவலைப்பட்டார்.
மூளையில் ரத்தக் கசிவு
பின்னர் கார் வந்ததும் நடந்ததை அறிந்து அதிர்ந்தார். மயங்கிக் கிடந்த ஜெஸ்ஸிகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அப்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
ஐசியூ
வயிற்றில் இருந்த பெண் குழந்தை அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்து மீட்கப்பட்டது. 6 மாத குழந்தை என்பதால் பச்சிளம் குழந்தைகளை வைத்து பராமரிக்கும் ஐசியூவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
சோகம்
கியூடெக்ஸின் இறப்பால் காதலன் உள்பட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் வரை நன்றாக ஆரோக்கியமாக இருந்த கியூடெக்ஸ் தற்போது தனது குழந்தையை கூட பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரீகிளாம்சியா
பிரீகிளாம்சியா நோயானது கர்ப்பிணிகளுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கும் வரும். இது குறித்த அறிகுறிகள் ஏதும் அவர்களுக்கு தெரிவதில்லை. உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பின்னர் கணிசமான அளவு புரதங்கள் சிறுநீர் மூலம் வெளியேறும். இதனால் கல்லீரல், சிறுநீரகத்தை செயலிழக்க வைக்கும்.