உயிரோடு புதைக்கப்பட்ட 16 வயது கர்ப்பிணி சவப்பெட்டிக்குள் கண் விழித்தார்
ஹோண்டுராஸ்: ஹோண்டுராஸில் உயிருடன் புதைக்கப்பட்ட 16 வயது கர்ப்பிணி கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள லா என்ட்ராடாவைச் சேர்ந்தவர் நெயேசி பெரேஸ்(16). அவரது கணவர் ரூடி கொன்சாலஸ். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவரது வீட்டிற்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெரேஸ் மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வாயில் இருந்து நுரையாக வந்துள்ளது.
இதை பார்த்த அவரது பெற்றோர் அவரை தீய சக்தி ஆட்கொண்டதாக நினைத்து உள்ளூர் பூசாரியை அழைத்து பூஜை செய்ய வைத்துள்ளனர். உயிரற்றவர் போல இருந்த பெரேஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மணிநேரம் கழித்து அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரேஸின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட 24 மணிநேரம் கழித்து கல்லறைக்கு ரூடி சென்றுள்ளார். அப்போது கல்லறையில் இருந்து பெரேஸின் சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கல்லறையை உடைத்து சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது பெரேஸ் உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சவப்பெட்டியில் உள்ள கண்ணாடியை பெரேஸ் உடைத்தபோது அவரது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெரேஸ் இம்முறை நிஜமாகவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.