நான்சென்சா பேசாதீங்க... செய்தியாளரை திட்டி நிதானம் இழந்த அமெரிக்க அதிபர் ஒபாமா...
வாஷிங்டன் : அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனத்தின் செய்தியாளரை முட்டாள்தனமாக பேசாதீர்கள் என்று ஒபாமா திட்டியது அங்கிருந்த மற்ற செய்தியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அறிவுப்பூர்வமாகவும், நகைச்சுவை நிரம்பிய பேச்சுக்கும் பெயர் பெற்றவர் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஆனால் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
பிரபலமான சி.பி.எஸ். நிறுவனத்தின் செய்தியாளரான மேஜர் காரெட், ஈரானுடனான பேச்சுவார்த்தையின் போது அந்த நாட்டு சிறையில் வாடும் 4 அமெரிக்கர்கள் விடுதலை தொடர்பாக ஏன் பேச்சு நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒபாமா, முட்டாள்தனமாக பேசாதீர்கள். இதுபோன்ற விஷயங்கள் பற்றி நீங்கள் இன்னும் நன்றாக தெரிந்துக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் போது 4 அமெரிக்கர்கள் விடுதலைப்பற்றி பேசினால், அவர்கள் அதை ஒரு கேடயமாக பயன்படுத்தி பல சலுகைகளை கேட்பார்கள். அதை தவிர்க்கும் பொருட்டே அந்த விஷயத்தை நாங்கள் எழுப்பவில்லை. ஆனால், அங்கு சிறையில் வாடும் 4 பேரையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறினார்.
நீண்டகாலமாக வெள்ளை மாளிகை செய்தியாளராக பணியாற்றி வரும் காரெட்டை, அதிபர் ஒபாமா கடிந்துகொண்டதைப் பார்த்த மற்ற செய்தியாளர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.