கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிய ஒபாமா
ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அங்கிருந்த கியூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டார்.
கியூபாவில் 1959ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி நடந்தது முதல் அமெரிக்கா அந்நாட்டின் மீது தொடர்ந்து தடைகளை விதித்து வருகிறது. அத்துடன் கியூப அரசைக் கவிழ்க்கவும் பிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்யவும் அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் கியூபா அதிபர் பதவியில் இருந்து விலகிய பிடல் காஸ்ட்ரோ, தமது சகோதர் ரவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். இருந்தபோதும் அமெரிக்காவுடனான உறவு சீரடையவில்லை.
இதனிடையேதான் தென்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ஜோகன்னஸ்பெர்க் சென்றார். அப்போது ரவுல் காஸ்ட்ரோவுடன் ஒபாமா கைகுலுக்கினார்.
இருநாட்டு தலைவர்கள் முதல் முறையாக கை குலுக்கிக் கொண்டது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.