மோடி உதவி கேட்டது உண்மை.. டிரம்ப் பொய் சொல்ல மாட்டார்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வெள்ளை மாளிகை
பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூயார்க்: பிரதமர் மோடியுடன் காஷ்மீர் பிரச்சனை குறித்து நடந்த பேச்சுவார்த்தை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நடத்திய சந்திப்பு சர்ச்சையாகி உள்ளது. இதில் அவர்கள் இருவரும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசிக்கொண்டார்கள்.
அதில், காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவும்படி தன்னிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
என்ன சொன்னார்
இதில் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார். காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் மறுப்பு
ஆனால் இதற்கு இந்திய தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. காஷ்மீர் பிரச்சனையை இந்தியா - பாகிஸ்தானின் தனிப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்ப்போம், வேறு நாட்டை இதில் ஈடுபடுத்த மாட்டோம் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மோடி டிரம்ப்பிடம் உதவி கேட்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
என்ன சர்ச்சை
இந்த பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து டிரம்பின் ஆலோசகர் லாரி குட்லோவ் கருத்து தெரிவித்துள்ளார். மிகவும் கோபமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்க அதிபர் வாயில் வந்ததை எல்லாம் அப்படியே பேச மாட்டார். அவர் சொன்னது எல்லாம் முழுக்க முழுக்க உண்மை.
ஏன் இல்லை
இதில் அவர் பொய் சொல்ல வேண்டும் என்று என்ன இருக்கிறது. அவர் நடந்த விஷயத்தைதான் பேசி இருக்கிறார். தானாக எதையும் அவர் உருவாக்கி பேசவில்லை. டிரம்ப் பேச்சு குறித்து இப்படி எழுப்பப்படும் கேள்விகளே தவறானது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்று அவர் கூறியுள்ளார்.
மீண்டும் சர்ச்சை
இதனால் மீண்டும் தற்போது அமெரிக்கா இந்தியா உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் கருத்தில் உண்மை இருக்கிறதா? அப்படி என்றால் உண்மையில் மோடி டிரம்ப்பிடம் உதவி கேட்டாரா, காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க மோடி உதவி கேட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு இதுவரை மோடி பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.