மெக்கா மசூதி விபத்து: ஜனாதிபதி, துணைஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியினுள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் ஆழ்ந்த அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
செளதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை வரும் 24ம் தேதி தொடங்குகிறது. இருப்பினும் முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகரில் குவிந்துள்ளனர்.
மெக்காவில் உள்ள ‘மஸ்ஜிதல் ஹரம்' எனப்படும் பெரிய மசூதி மீது ராட்சத கிரேன் ஒன்று நேற்றிரவு சரிந்து விழுந்ததில் 107 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் 2 பேர் இந்தியர்கள் என்றும் மேலும் 15 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் அவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்கள் என்றும், அவர்களை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அங்குள்ள இந்திய டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ்' புனித யாத்திரைக்கு சென்ற இடத்தில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்துக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
My thoughts & prayers are with the families of those who lost their lives in the crane crash in Mecca. I wish the injured a quick recovery.
— Narendra Modi (@narendramodi) September 12, 2015
மெக்கா மசூதி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுத்பத்தினருக்கு பிரதமர் மோடி, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், மெக்கா மசூதியில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணமும், பிரார்த்தனைகளும் மக்கா பெரிய மசூதியினுள் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரை சுற்றியே உள்ளது. இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என அந்த இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி இரங்கல்
Extremely saddened to learn of the tragic crane accident at the Grand Mosque in Mecca. My prayers are with the bereaved families
— Office of RG (@OfficeOfRG) September 12, 2015
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், மெக்காவின் பெரிய மசூதியில் நிகழ்ந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.