வறுமையை ஒழித்து... மனித சரித்திரத்தில் மாபெரும் சாதனை... கொண்டாட்டத்தில் சீனா
பெய்ஜிங்: சீனா தனது நாட்டில் நிலவி வந்த வறுமையை முற்றிலுமாக ஒழித்து, மாபெரும் மனிதக்குல அதிசயத்தை படைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
நமது அண்டை நாடான சீனா, 140 கோடி பேருடன் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது. ஒரு காலத்தில் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த சீனா, உலகமயமாக்கலை அனுமதித்தவுடன் வேற லெவலில் வளர தொடங்கியது.
அந்நாட்டில் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில், தனது நடவடிக்கைகளில் வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள சீனா, வறுமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
வறுமையை ஒழித்துவிட்டோம்
இது குறித்து சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், "சீனா நாட்டிலுள்ள வறுமையை முற்றிலுமாக ஒழித்துவிட்டது. உலகில் வேறு எந்த நாடாலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை கோடி மக்களை வறுமையிலிருந்து வெளியேற்ற முடியாது. அரசின் திட்டங்கள் மூலம் 77 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மாபெரும் அதிசயம்
அதிலும் குறிப்பாகக் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.89 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளிலும் இருக்கும் வறுமையை 2030ஆம் ஆண்டிற்குள் நீக்க வேண்டும் என ஐநா கெடு விதித்திருந்து. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனா வறுமையை ஒழித்துவிட்டது. இதன் மூலம் சீனா மனித குலத்திலேயே மிகப் பெரிய ஒரு அதிசயத்தைப் படைத்துள்ளது. இது நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும்" என்றார்.
வளரும் நாடுகளுக்கு உதவுவோம்
மேலும், கடந்த 40 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வறுமை நிலையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் சுமார் 40% சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்தத் திட்டங்களுக்காக இதுவரை 246 பில்லியின் டாலர்களை செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இனி வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் இருக்கும் வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தச் சீனா உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம்
சீனா வறுமைக்கோடு என்பதை 2.30 டாலராக நிர்ணயம் செய்துள்ளது. அதாவது ஒருவரின் தினசரி வருமானம் 2.3 டாலருக்கு மேல் இருக்கும்பட்சத்தில் அவர் வறுமைக்கோட்டைக் கடந்துவிட்டார் எனப் பொருள். இது உலக வங்கியின் அளவைவிட (தினசரி ஊதியம் 1.9 டாலர்) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சீனாவில் அதிகரித்துள்ள ஊழல் மற்றும் அரசு தரவுகளில் அதிகரித்துள்ள அரசியல் தலையீடுகள் காரணமாகச் சீனாவின் இந்தக் கூற்று நம்பும் வகையில் இல்லை என மேற்கத்தியப் பொருளாதார வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.