2 நாள் பயணமாக அபுதாபி சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
அபுதாபி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார். அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சாட்டோ டி சான்டில்லி நகரில் பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பிரான்சில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல்வாதிகள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். புதிய பாரதத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று அபுதாபி சென்றுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அபுதாபி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி உயர் அதிகாரிகளும், அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.