வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன பயணம்.. யாசர் அராஃபத் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாலஸ்தீனம் சென்றடைந்தார்.
ரமல்லாஹ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாலஸ்தீனம் சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் ஹுசைனை சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து இன்று பாலஸ்தீனம் நாட்டுக்கு சென்றடைந்தார். அவரை பாலஸ்தீனம் நாட்டு பிரதமர் ரமி ஹமதல்லா வரவேற்றார்.
மோடி அஞ்சலி
அங்கிருந்து முன்னாள் பாலஸ்தீன ஜனாதிபதி யாசர் அராஃபத்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும், இந்தியா - பாலஸ்தீனம் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அம்மான் புறப்பாடு
பின்னர் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதைத்தொடர்ந்து அதிபர் அப்பாஸுடன் மதிய உணவு சாப்பிடும் மோடி, பின்னர் பாலஸ்தீனத்தில் இருந்து அம்மான் நகருக்கு புறப்படுகிறார்.
முதல்முறையாக பயணம்
கடந்த ஆண்டு முதல் முறையாக இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி. அப்போது மேற்கு கரையில் உள்ள ரமல்லாஹ் நகருக்கு செல்லவில்லை. இந்நிலையில் இம்முறை பிரதமர் மோடி ரமல்லாஹ் நகருக்கு முதல்முறையாக சென்றுள்ளார்.
இந்திய மக்களுடன் சந்திப்பு
துபாயில் நாளை நடைபெற இருக்கும் ஆறாவது உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்கு வசிக்கும் இந்திய மக்களை அவர் சந்தித்து பேசுகிறார்.
முதல்முறையாக ஓமன்
அடுத்த நாளான 12-ம் தேதி துபாயிலிருந்து ஓமன் செல்லும் மோடி, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது ஓமன் நாட்டுக்கு அவரது முதல் பயணமாகும். அன்று மாலையே அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் டெல்லிக்கு வருகிறார்