எல்லாரும் சௌக்கியம்..தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழியிலும் பேசிய மோடி.. ஹவுடி மோடியில் அசத்தல்!
ஹூஸ்டன்: எல்லாரும் சௌக்கியம் என்பதை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து இந்திய மொழிகளிலும் பிரதமர் மோடி பேசி அசத்தினார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி. 'ஹவுடி மோடி' (மோடி நலமா) நிகழ்ச்சியில் பங்கேற்றார். சுமார் 50,000 அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றினார்கள்.
இந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், இங்குள்ள சூழ்நிலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனிச்சிறப்புடையதாக இருக்கிறது. டெக்ஸாஸை பற்றி பேசும் போதெல்லாம் பிரம்மாண்டமாக இருக்கிறது: ஒரு வரலாறு உருவாக்கப்படுவதை நான் காண்கிறேன்.அத்துடன் ஒரு புதிய கெமிஸ்டரி உருவாவதையும் பார்க்கிறேன்.
சாதாரண மனிதன்
ஹவுடி மோடி என்று இந்த நிகழ்ச்சியை அழைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் நான் 130 கோடி இந்தியர்களுக்காக பணியாற்றும் சாதாரண மனிதன் தான்.
பன்முகத்தன்மை
நமது பல்வேறு மொழிகள் தான் நம் இந்தியாவின் அடையாளம். பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தில் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது ஜனநாயகத்தின் துடிப்பான அடையாளமே பன்முகத்தன்மை தான்.
முடியாது என்றார்கள்
எதையும் மாற்ற முடியாது என்ற மனநிலை உடையவர்களுக்கு இந்தியா சவாலாக உள்ளது. இப்போது நாம் உயர்ந்த இலக்கை அடைவதுடன் புதிய உயரத்தையும் அடைகிறோம்" என்றார்.
தமிழில் பேசிய மோடி
அப்போது பிரதமர் மோடி மொழிகளின் பெருமைகளை பற்றி விரிவாக பேசியதுடன், தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் எல்லாரும் சௌக்கியம் என்ற வாக்கியத்தை பேசினார். இதை கேட்டு இந்தியர்கள் மிகப்பெரிய அளவில் நிகழ்ச்சி அரங்கில் கரவொலி எழுப்பினர். இந்த ஒற்றை வாக்கியம் மூலம் மொத்த இந்தியாவையும் ஒன்றுபடுத்தினார் பிரதமர் மோடி.