விமான ஆம்புலன்ஸ் 'பைலட்' ஆனார் இளவரசர் வில்லியம்: சம்பளத்தை தானம் செய்கிறார்
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திங்கட்கிழமை விமான ஆம்புலன்ஸ் பைலட்டாக தனது புதிய வேலையை துவங்கினார். அப்போது அவர் மூன்றாவது குழந்தை பெறுவது பற்றி சூசமாக தெரிவித்தார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஈஸ்ட் ஆங்கிளிகன் ஏர் ஆம்புலன்ஸ் விமானியாக திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் அந்த வேலை மூலம் கிடைக்கும் சம்பளத்தை தானமாக அளிக்க உள்ளார்.
அவர் கார் விபத்தில் காயம் அடைந்தவர்கள், மாரடைப்பால் தவிப்பவர்களை விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியை செய்கிறார். அவர் தினமும் ஒன்பதரை மணிநேரம் பணியாற்ற உள்ளார்.
இது குறித்து வில்லியம் கூறுகையில்,
இந்த புதிய வேலை பிடித்துள்ளது. இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வது லேசானது அல்ல. அதுவும் என் மகன் ஜார்ஜ் சேட்டைக்காரன். கேட் அருமையான தாயாக உள்ளார். இப்பொழுது தானே இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது என்றார்.
இளவரசர் வில்லியம் ராயல் விமானப்படையில் விமானியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.