அமெரிக்காவில் ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் டிசைனர் உடைகள்
கலிபோர்னியா: கார் விபத்தில் பலியான இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடைகள் அமெரிக்காவில் உள்ள ஜூலியான் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வருகிறது.
இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியானார். அவர் உயிருடன் இருக்கையில் பல்வேறு நல்ல காரியங்களுக்காக உதவி செய்தார். அவர் கார் விபத்தில் பலியாவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு 1997ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 10 உடைகளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலத்திற்கு விட்டார். புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆய்வுக்கு நிதி திரட்டித் தருமாறு இளவரசர் வில்லியம் தனது தாய் டயானாவை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தான் டயானா தன்னிடம் இருந்த கவுன்களில் 10 கவுன்களை ஏலத்தில் விட்டு நிதி திரட்டினார். அந்த கவுன்களை அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் மவ்ரீன் டன்கல் ஏலத்தில் எடுத்தார். நிதி நெருக்கடி காரணமாக அவர் 4 கவுன்களை 2011ம் ஆண்டு ஏலத்தில் விட்டார்.
இந்நிலையில் டயானாவின் மேலும் 4 கவுன்கள் வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸில் இருக்கும் ஜூலியான் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு விடப்படுகிறது.
அந்த பெண்மணி டயானாவின் கவுன்களை 17 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார். 4 கவுன்களில் மூன்று டயானாவுக்கு மிகவும் பிடிதத் ஆடை வடிவமைப்பாளர் கேத்ரீன் வாக்கரால் வடிவமைக்கப்பட்டது.
ஒவ்வொரு கவுனும் ரூ. 37 லட்சம் முதல் ரூ. 49 லட்சம் வரை ஏலத்தில் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.