பயபுள்ள, எப்படி வந்து மாட்டிக்கிச்சு பாருங்க...!
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள சிறையிலிருந்து நைசாக யாருக்கும் தெரியாமல் ராத்திரியில் வெளியேறி தனது மனைவியை கூட்டிக் கொண்டு ஹோட்டலுக்குப் போயிருந்தார் ஒரு கைதி. ஆனால் அவரது பேஸ்புக் பக்கத்தைப் பார்த்து அடையாளம் கண்டு விட்ட ஹோட்டல்காரர்கள், போலீஸாருக்குப் போட்டுக் கொடுத்து விட போலீஸார் வந்து அந்தக் கைதியை மீண்டும் சிறைக்கு கொண்டு போய் விட்டனர். இப்போது அவர் மேலும் 15 மாதம் சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த கைதியின் பெயர் டக்ளஸ் வார்ட். ஜஸ்ட் 26 வயதுதான் ஆகிறது. இங்கிலாந்தின் லிங்கன்ஷயரில் உள்ள நார்த் சீ திறந்த வெளி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இவர் இரவு நேரத்தில் சிறையிலிருந்து வெளியேறினார். தனது மனைவி எய்லீன் வார்டுக்குப் போன் செய்து ஸ்பேல்டிங் என்ற இடத்தில் உள்ள கிளே ஹால் ஹோட்டலுக்கு வரச் சொன்னார். எய்லீனும் வந்தார்.
அங்கு வந்த பிறகு இருவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அறை எடுத்துத் தங்கவும் தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தற்செயலைக வார்டின் முகத்தைப் பா்த்த ஊழியர்கள் சிலருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவரது பேஸ்புக் பக்கத்தைத் தேடிப் பிடித்து பார்த்த அவர்களுக்கு வார்டு ஒரு தண்டனை அனுபவித்து வரும் கைதி என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீஸார் வார்டை கைது செய்து மீண்டும் சிறைக்குக் கொண்டு சென்றனர். எய்லீன் மீது வழக்குப் போடப்படவில்லை. அதேசமயம் வார்டு மேலும் 15 சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டலில் தங்கியிருந்த சமயத்தில் சில பல பொய்களைச் சொல்லி தனக்கு இலவசமாக லக்சரி ரூம் தர வேண்டும் என்றும் வார்டு பந்தா காட்டியுள்ளாராம். அதன் பிறகே ஹோட்டல் ஊழியர்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது.
சட்டவிரோதமாக துப்பாக்க வைத்திருந்த வழக்கில் கைதாகி 5 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்தவர் வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.