வால்மார்ட் கோட்டையில் ஜல்லிக்கட்டு முழக்கம்... அமெரிக்கா முழுவதும் திரளும் ஆதரவு!
பென்டன்வில் (யு.எஸ்): தமிழகத்தைப் போல் அமெரிக்காவிலும் தமிழர்கள் வசிக்கும் ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் திரளுகின்றனர். வால்மார்ட் தலைமையிடம் அமைந்துள்ள பென்டன்வில் நகரில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்திவர்களும் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பென்டன்வில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர் வசந்த் ஏற்பாடுகளை செய்திருந்தார். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களால் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவு அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.
ஒரு வயது இரட்டைக் குழந்தைகளும் 70 வயது பாட்டியும் அமெரிக்காவில் இருந்தே எங்கள் ஆதரவை தெரியப்படுத்த விரும்பினோம். ஒத்த கருத்துடையை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நண்பர்கள் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்.
குறுகிய கால அவகாசம் என்றாலும், நூறு பேருக்கும் மேல் திரண்டு வந்திருந்தனர். கரூரிலிருந்து வந்திருந்த 70 வயது பாட்டியும் எங்களுடன் பங்கேற்றார். 1 வயது இரட்டைக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருவரும் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
மைனஸ் 6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கடும் குளிராக இருந்த போதிலும், அனைவரும் உணர்வுப்பூர்வமாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்திய தூதரகத்திற்கு அனுப்பும் மனுவிலும அனைவரும் கையெழுத்திட்டனர். உலகெங்கும் உள்ள தமிழர்களின் ஒட்டு மொத்த ஆதரவுடன், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்றுதான் நம்புவதாகவும் வசந்த் தெரிவித்தார்.
தமிழ்ச் சங்கங்கள் ஆதரவு
தமிழர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு அமெரிக்காவில் இயங்கும் தமிழ்ச்சங்கங்களும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். செயிண்ட் லூயிஸ் நகரில் இயங்கும் மிசோரி தமிழ்ச் சங்கம் ஜல்லிக்கட்டுவை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் கலித்தொகைப் பாடலைக் குறிப்பிட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
'தைப்பொங்கல் என்பது உலகமெங்கும் வாழும் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இது தங்களது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. அந்த நிகழ்வின் போது நடைபெறும் இந்த ஏறுதழுவுதல், மற்ற நாடுகளில் நடை பெறுவதை போல மாடுகளைக் கொடுமைப்படுத்தும் விளையாட்டு அல்ல. இது காளையைத் (ஏறு தழுவுதல்) தழுவும்
விளையாட்டு.
சல்லிக்கட்டு என்றழைக்கப்படும் இந்த ஏறுதழுவல், தமிழன் வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய காலம் தொட்டே நடைபெற்று வருவது.
கலித்தொகை கூறும் ஏறு தழுவல்
'கூடிக் கொல்லுகின்ற காளையினுடைய கொம்புக்கு அஞ்சும் ஒருவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்' என்று உரைக்கும் கலித்தொகையில் வரும் பாடல் நம் தமிழர் பண்பாட்டை என்றென்றும் பறை சாற்றும்.
தொன்றுதொட்டு நடைபெறும் இந்த ஏறுதழுவலின் மூலம் பாரம்பரிய நாட்டு மாட்டினம்
அழியாமலும் நம் சமூகம் பாதுகாத்து வருகிறது. இப்படி நம் பண்பாட்டோடு தொடர்புடைய இந்த விழாவைத் தடை செய்தது உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் ஒரு ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகமத் தமிழகம் எங்கும் நடைபெறும் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவையும் அதில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்.
எங்கள் தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றும் விதமாக ஒரு அவசரச் சட்டம் இயற்றி,சல்லிக்கட்டு நடைபெற உதவுமாறு உலகமெங்கும் வாழும் தமிழர்களின் சார்பாக மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் கேட்டுக்கொள்கிறது' என்று அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார்கள்.
கிழக்கு முதல் மேற்கு கடற்கரை வரையிலும்
அட்லாண்டாவில் பல்வேறு தமிழ் நண்பர் குழுக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை, திரளாக திரண்டு ஆதரவு தெரிவிக்க உள்ளார்கள். மாலை 4 மணி அளவில் கம்மிங் ஷரோன் பார்க்கில் (Sharon Park, Cumming GA) இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அன்று மதியம் இந்தியத் தூதரக அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கவும் முடிவு செய்துள்ளார்கள் சிங்கம்புணரி, சிறாவயல் ஊர்களில் நடைபெறும் மஞ்சு விரட்டுவை ஆதரிக்கும் வகையில், அங்குள்ள சிறு விவசாயிகள் 50 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் இந்த குழுவினர் வழங்கி இருக்கிறார்கள்.
கோபால் மற்றும் சுவாமிநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அட்லாண்டா தமிழ்ச் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும் நியூ ஜெர்ஸி, டல்லாஸ், மினியாபோலிஸ், சியாட்டல் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் நகரங்களில் ஜல்லிக்கட்டுக்கு பற்றிய விழிப்புணர்வுப் போராட்டங்களுக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
-இர தினகர்