குடியரசு தினத்தன்று... இந்திய தூதரகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. இத்தாலியில் பரபரப்பு
ரோம்: குடியரசு தினத்தன்று இத்தாலியிலுள்ள இந்கிய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
இரு நாட்களுக்கு முன், நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்திய தூதரகம் சேதம்
பல்வேறு நாடுகளிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிலும், அந்தந்த நாடுகளிலுள்ள கொரோனா பரவல் நிலையைப் பொறுத்து குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள இந்திய தூதரகத்தைக் குடியரசு தினத்தன்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் பகுதியை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்கக் கோரி சிலர் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
இந்திய அரசு ரோமில் நடைபெற்ற இந்நிகழ்வு தொடர்பாக இத்தாலிய அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக இத்தாலிய அதிகாரிகளிடம் நாங்கள் எங்கள் கவலைகளை தெரிவித்தோம். வெளிநாட்டுத் தூதரகங்களில் இந்திய தூதர்கள் மற்றும் தூதரக வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த நாடுகளின் பொறுப்பாகும்" என்றார்.
உரிய நடவடிக்கை
இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள இந்திய தூதரகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தவறு செய்தவர்கள் மீது இத்தாலி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற அசம்பவாத நிகழ்ச்சிகள் வரும் காலங்களில் நடைபெறாமல் இருப்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவிலும் போராட்டம்
இதேபோல அமெரிக்க தலைநகர் வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சீக்கிய டி.எம்.வி இளைஞர் சங்கம் மற்றும் சில காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தினர். இதில் மத்திய அரசின் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.