இஞ்சின் கோளாறினால் விமான விபத்தா? பாக். அதிகாரிகள் தீவிர விசாரணை
பாகிஸ்தானில் 48 பேரை பலிகொண்ட கோர விமான விபத்துக்கு இஞ்சின் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு சர்வதேச விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 48 பேரை பலிகொண்ட கோர விமான விபத்துக்கு இஞ்சின் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அந்நாட்டு சர்வதேச விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர விபத்து குறித்து அவர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் PK661 என்ற பயணிகள் விமானம், புதன்கிழமை மாலை வடக்கு பாகிஸ்தானின் பகுந்துன்ஹாவா மாகாணம் சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் சர்வதேச விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த விமானம் ஹெவிலியன் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சத்தா படோலினி கிராமத்தின் மேலே பறந்து சென்ற நிலையில் திடீரென விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சித்ரால் காவல் துணை ஆணையர் ஒசாமா வாரியா, பாப் சிங்கர் சுனைத் ஜாம்ஜெட் அவரது மனைவி உள்ளிட்ட 48 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது.
இந்த விபத்து எஞ்சின் கோளாறுதான் காரணம் என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன தலைவர் அசம் சைகோல் குற்றம் சுமத்தியுள்ளார்.
விபத்து நடப்பதற்கு முன்பு புதன்கிழமை மாலை 4.15 மணி அளவில் எச்சரிக்கை அழைப்பு விமான பைலட்டிடம் இருந்து வந்ததாகவும் அடுத்த சில நிமிடங்களில் இந்த கோர விபத்து நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ஏடிஆர் 42-ரக விமானத்துனக்கு கடந்த அக்டோபரில்தான் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஏ-செக் சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் அவர் சொன்னார். இந்த விபத்தில் மனித தவறுகளோ அல்லது தொழில்நுட்ப கோளாறுகளோ நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அசம் சைகோல் குறிப்பிட்டார்.
இந்த விபத்து குறித்து பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தீவிர விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விமான விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் முழுவதுமாக மீட்கப்பட்டு அபோதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதில் 6 உடலகள் மட்டுமே உடனடியாக அடையாளம் காணப்பட்டதாகவும், எஞ்சிய உடல்கள் மிக மோசமாக சிதைந்து உள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி அடையாளம் காணப்பட இருப்பதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக 3 ஹெலிகாப்டர்கள் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனைக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் பாப் சிங்கர் சுனைத் ஜாம்ஜெட், 2 ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு சீனாக்காரர் இருந்துள்ளனர் என்று அபோதாபாத் ஆயுப் மருத்துவர் சுனைத் தெரிவித்திருக்கிறார்.