சக்கரங்கள் பழுதால் எமிரேட்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தகவல்
துபாய்: திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற விமானம் விபத்துக்குள்ளாக காரணம் தரை இறங்கும் போது சக்கரங்கள் சரியாக இயங்காமல் போனதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விமானத்தின் வால் பகுதியில் பலமான காற்று தாக்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதியன்று 288 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் எமிரேட்சின் போயிங் விமானம் புறப்பட்டது. துபாய் விமான நிலையத்தில் இந்திய நேரப்படி பகல் 2.20 மணிக்கு விமானம் தரை இறங்கியது.
அப்போது திடீரென விமானம் ஓடுதளத்தில் மோதி விபத்து ஏற்பட்டது இதனால் அவசர வழிகள் திறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் மின்னல் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். 90 வினாடிகளில் பயணிகள் வெளியேறியதும் விமானத்தின் பின் பகுதி குபீரென தீப்பிடித்து எரிந்தது.
ஒருவர் பலி
இதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் தீயை அணைத்த வீரர்களில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விமான விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பலமான காற்று...
விமானம் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி காற்றின் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் விமானம் நிலைதடுமாற ஓடுதளத்தில் அதை நேராக இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
முன்சக்கரங்கள் பழுது
பின்சக்கரங்கள் ஒரே நேரத்தில் தரையை தொடவேண்டும். ஆனால் வலதுபுற பின்சக்கரங்கள் மட்டும் முதலில் தரையை தொட்டது. இடதுபுற பின்சக்கரங்கள் 3 வினாடிகள் தாமதமாக தரையை தொட்டது. இந்த நேரத்தில் விமானத்தின் முன்சக்கரங்கள் தரையை தொடாமல் இருந்தன.
85 அடி தூரம்...
முதல்முறை தரை இறங்க முயற்சிக்கப்பட்டு முன்சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் 85 அடி தூரம் விமானத்தை அந்தரத்திலேயே தரையிறக்காமல் வைத்து இருந்துள்ளனர். 6 வினாடிகள் கழித்து முன்சக்கரம் திரும்ப விமானத்தின் உள்ளே சென்றுவிட்டது.
திடீர் தீ
இந்த நேரத்தில் விமானம் வேகத்தை இழந்ததால் விமானிகள் இரு ஜெட் என்ஜின்களையும் வேகமாக இயக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதற்குள் விமானம் தரையைத் தொடவேண்டிய கட்டாயம் காரணமாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது முன்சக்கரங்கள் இருந்த பகுதியை திறக்க முடியாததால் விமானத்தின் முன்பகுதி ஓடுதளத்தில் மோதியும், என்ஜின் அதிவேகமாக இயக்கப்பட்டதாலும் தீப்பிடித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.